பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் ரசிகர்களைக் கலக்கமடையச் செய்யும் ஒரு விசித்திரமான சம்பவம், சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் (ஏப்ரல் 18 அன்று) நடந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடர் தொடங்கிய நாள் ஏப்ரல் 18. அன்று நடந்த முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த முதல் போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் அதிரடியாக ஆடி 158* ரன்கள் குவித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

ஆனால், அந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போது விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்திருந்தார். மேலும், அந்தப் போட்டியிலும் ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இப்போது, அப்படியே 17 ஆண்டுகள் கழித்து, 18 வது ஐபிஎல் தொடரான 2025 ஐபிஎல் தொடரில், அதே ஏப்ரல் 18ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மேலும், இந்தப் போட்டியிலும் ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதில் மேலும் சுவாரஸ்யமாக, இது 18வது ஐபிஎல் தொடர் என்பதும், விராட் கோலியின் ஜெர்ஸி எண் 18 என்பதும் இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது ஜெர்ஸி எண் 18 என்பதால் விராட் கோலியின் ஆர்சிபி அணி 18 வது ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் ஆரூடம் சொல்லி வந்த நிலையில் தற்போது அது அதிர்ஷ்டமா, இல்லை சாபமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படி ஒரே மாதிரியாக அமைந்த இந்த விசித்திரமான ஒற்றுமைகளைப் பார்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சொதப்பலாக விளையாடிய ஆர்சிபி அணி, அதன் பிறகு ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. சில முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தாலும், பலமுறை பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாத அணியாகவே இருந்துள்ளது. புள்ளிப் பட்டியலிலும் பின்தங்கிய அணியாகவே பலமுறை காணப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அரங்கேறிய அதே போன்ற நிகழ்வுகள், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடந்துள்ளதால், இந்த முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொதப்பலாக விளையாடி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போய்விடுமோ என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டு (2025) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி தோல்விகளை மாறி, மாறி சந்தித்து வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் சந்தித்துள்ளது. இப்படியே போனால், அந்த அணி இந்த ஆண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போய்விடுமோ என அந்த அணியின் ரசிகர்கள் தங்கள் மனக்குமுறலை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.