பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி விழா, 11 ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த துயர சம்பவமாக மாறியது. இந்த நிலையில், அந்த சம்பவம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த சின்னசாமி மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆலோசித்து வருவதாகக் கூறி இருக்கிறார். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் அதன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோக செய்தியாக அமைந்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றது. 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் அந்த அணி, 18 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அதனால் அந்த அணி ரசிகர்கள் உற்சாகம் மிகுதியில் இருந்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐபிஎல் கோப்பை வென்றதற்கு அடுத்த நாளே இந்த வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் சின்னசாமி மைதானத்தின் அருகில் ஒன்று கூடினர். அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, 11 பேர் வரை அதில் பலியானார்கள். தற்போது அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடக அரசு மீதும் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, பெங்களூரு நகரின் மத்திய பகுதியில் இருக்கும் சின்னசாமி மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
சின்னசாமி மைதானம் பெங்களூரு விதான் சவுதா எனும் சட்டமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் இடம் பெற்று இருக்கும் பிரம்மாண்ட கட்டிடத்திற்கு அருகில் உள்ளது. அந்த இடம் பொதுவாகவே அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது. இதனிடையே ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றால் அந்த இடம் மேலும் மோசமான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது.
மேலும், இது போன்ற ஒரு இடத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டதால்தான் இந்த அசம்பாவிதம் நேர்ந்திருக்கிறது என்பதை வைத்துத்தான் சித்தராமையா அந்த மைதானத்தையே வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது. ஏனெனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்றாலே சின்னசாமி மைதானம் எனும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்றாக உள்ளது. இனி அந்த மைதானம் இருக்காது என்று சொல்வது பலருக்கும் ஒரு இழப்பாகவே இருக்கும். அதே சமயம், 11 பேர் பலியானதை வைத்து பார்க்கும் போது இந்த முடிவு சரியான ஒன்றாகவும் இருக்கும்.