பெங்களூர்: ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடாது எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் உயிரிழந்ததே இதற்கு முக்கிய காரணம். பெங்களூருவின் சின்னசாமி மைதானத்துக்குப் பதிலாக, ஆர்சிபி அணி ஐந்து போட்டிகளை நவி மும்பையிலும், இரண்டு போட்டிகளை ராய்பூரிலும் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபியின் சொந்தப் போட்டிகள், கடந்த ஆண்டு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய ஊர்வலத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்திலும், ராய்பூரில் உள்ள ஷாஹீன் வீர் நாராயண் சிங் மைதானத்திலும் ஆர்சிபி தனது ஐபிஎல் 2026 போட்டிகளை விளையாடும்.

கடந்த ஜூன் 4 ஆம் தேதி, ஆர்சிபி-யின் ஐபிஎல் வெற்றிப் பேரணியின்போது சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட ஒரு துயரமான நெரிசல், 11 உயிர்களைப் பலிகொண்டதுடன் 50 பேரை காயப்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பெங்களூருவின் எம். சின்னசாமி மைதானம் இதுவரை எந்தவொரு சர்வதேசப் போட்டியையும் நடத்தியதில்லை.
மாநில அரசுடன் அண்மையில் கூட்டங்களை நடத்திய கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை மைதானத்துக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சித்து வருகிறது. எனினும், கடந்த டிசம்பரில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, விஜய் ஹசாரே டிராபி போட்டிகளை அங்கு நடத்த கேஎஸ்சிஏ-க்கு கர்நாடக அரசு அனுமதி மறுத்தது. இதன் விளைவாக, பிசிசிஐயின் சிறப்பம்ச மையத்திற்கு மாற்றப்பட்டன.
அண்மையில் கர்நாடக மாநில முதலமைச்சர் டிகே சிவகுமார் அளித்த பேட்டியில், ஐபிஎல் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், தற்போது போட்டிகள் நடத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அளித்த அறிக்கை, சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு "மிகவும் பாதுகாப்பற்றது" என்று குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்தப் போட்டிகள் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். கடந்த ஆண்டு ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் (RCA) தேர்தலை நடத்தத் தவறியதால், ஐபிஎல் தலைவர் அருண் தூமல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்தப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்கக்கூடும் என முன்னரே குறிப்பிட்டிருந்தார்.
ஆர்சிஏ அமைப்பு தற்காலிகக் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வந்தது, ஏனெனில் இரு போட்டிப் பிரிவுகள் அதன் சட்டப்பூர்வ உரிமையை கோரி வந்தன. "கடந்த ஆண்டே ஆர்சிஏ-க்கு நாங்கள் இதைத் தெரிவித்துவிட்டோம். உங்களால் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், அங்கே போட்டிகளை நடத்துவது எங்களுக்குக் கடினமாக இருக்கும்," என்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்திற்குப் பிறகு தூமல் தெரிவித்திருந்தார்.