ஆர்சிபி பவுலர் நுவான் துஷாரா விவகாரத்தில் திடீர் திருப்பம்.. இலங்கை வாரியத்திடம் மன்னிப்பு
கொழும்பு: 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அடுத்தடுத்து சோதனைகள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே நட்சத்திர வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடாத நிலையில், தற்போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவும் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் நுவான் இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது வழக்கு தொடர்ந்து, பின்னர் மன்னிப்பும் கோரி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனுக்காக 1.6 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியால் நுவான் துஷாரா தக்கவைக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தடையில்லா சான்றிதழ் (NOC) கோரியிருந்தார். ஆனால், வாரியம் நடத்திய கட்டாய உடற்தகுதி தேர்வில் துஷாரா தோல்வியடைந்ததாகக் கூறி, அவருக்கு சான்றிதழ் வழங்க இலங்கை வாரியம் மறுத்துவிட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் அதிருப்தியடைந்த துஷாரா, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். தனது ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாகவும் அவர் வாதிட்டார். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் இதே உடற்தகுதியுடன் தான் விளையாடி வருவதாகவும், கடந்த காலங்களில் சான்றிதழ் வழங்கிய வாரியம் தற்போது மறுப்பது அநீதி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திடீர் மன்னிப்பு
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு துஷாரா திடீரென ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும், வாரியத்திற்கு எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறவும் அவர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
ஆர்சிபி-க்கு என்ன பாதிப்பு?
துஷாரா மன்னிப்பு கோரியிருந்தாலும், இலங்கை வாரியம் தனது பிடிவாதத்தைக் தளர்த்திக் கொள்ளவில்லை. அவரது மனுவை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக வாரியம் அறிவித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அணி இன்று (ஏப்ரல் 10) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளும் நிலையில், துஷாரா அணியில் இல்லாதது பெரும் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. 31 வயதான துஷாரா இதுவரை 30 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2024-ல் மும்பை அணிக்காக ஆடிய அவர், கடந்த ஆண்டு பெங்களூரு அணியில் இணைந்தார். இந்த சட்டப் போராட்டத்தால் அவர் இந்த சீசனில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications