பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று 18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.இதனை ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்ற நிலையில் இந்த கொண்டாட்டம் அளவுக்கு மீறி சென்றது மிகப்பெரிய துயர சம்பவமாக மாறியிருக்கிறது.
இறுதிப் போட்டிக்கு அடுத்த நாள் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பேரணியை நடத்த ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. எனினும் இதற்கு போலீசார் முதலில் அனுமதி மறுத்தனர். ஆனால், நிகழ்ச்சி நடத்தப்படும் என சமூக வலைத்தளத்தில் ஆர் சி பி நிர்வாகம் பதிவிட்டது.

இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த பதிவை பார்த்து ஏராளமான ரசிகர்கள் திரண்டு நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.48 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு ஒரு நீதிபதி அடங்கிய விசாரணை கமிஷனை அமைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், ஆர்சிபி அணியின் நிர்வாகியான நிகில் சோசாலேவை பெங்களூர் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இது போன்று நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்த தனியார் நிறுவனமான டி.என்.ஏ சேர்ந்த சுனில் மேத்யூ என்ற நிர்வாகிகளையும் போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
இதே போன்று இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்து போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். மேலும் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்த கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைதுக்கு பயந்து அவர்கள் தற்போது தலைமுறைவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய பெங்களூர் மாநகர காவல் ஆணையர் தயானந்தா உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா சஸ்பெண்ட் செய்து இருக்கிறார். இதனிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் கர்நாடகா உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான நிலவரத்தை வரும் பத்தாம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.