RCB ஐபிஎல் கோப்பை வெற்றி ஊர்வலம் பற்றி வெளியான முக்கிய தகவல்.. அணி நிர்வாகம் வெளியிட்ட சூசக பதிவு
பெங்களூரு: 2026 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக
சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, இந்த ஆண்டு கோப்பையுடன் வீதிகளில் இறங்கி வெற்றி ஊர்வலம் நடத்தப் போவதில்லை என்ற தகவலை ரசிகர்களுக்கு மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை வென்றபோது, பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கசப்பான சம்பவத்தை மனதில் வைத்து, இந்த ஆண்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க அணி நிர்வாகம் மற்றும் பெங்களூரு மாநகர போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் ஆர்சிபி பதிவு
ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், "என்ன ஒரு அற்புதமான இரவு! ஆர்சிபி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றி உங்களுக்கானது. கொண்டாட்டங்கள் தொடங்கும் இந்த வேளையில், நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம். வீட்டில் இருந்தபடியே உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்தச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடுங்கள். அடுத்த ஆண்டு மைதானத்தில் உங்களைச் சந்திப்போம் 12-வது வீரர்களே!" எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் சின்னசாமி மைதானத்தில் இந்த ஆண்டு வெற்றி ஊர்வலம் இருக்காது என்பதை ஆர்சிபி அணி மறைமுகமாக தெரிவித்துள்ளது.
க்ருனால் பாண்டியா பெருமிதம்
ஆர்சிபி அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியா, தனது 11 ஆண்டுகால ஐபிஎல் பயணத்தில் 5-வது முறையாகக் கோப்பையை வென்றுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஒவ்வொரு ஐபிஎல் கோப்பையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நமது குழந்தைகளில் யாரை அதிகம் பிடிக்கும் என்று கேட்க முடியாதல்லவா? அதைப் போலத்தான் ஐபிஎல் கோப்பைகளும். எல்லாமே கடின உழைப்பால் கிடைத்தவை. 11 ஆண்டுகளில் 5 கோப்பைகளை வென்றிருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது" என்றார்.
பயணத்தின் பின்னால் இருந்த மூளை
மேலும் பேசிய க்ருனால் பாண்டியா, ஆர்சிபி அணியின் இந்தத் தொடர் வெற்றிக்குப் பின்னால் இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்குப் பாராட்டு தெரிவித்தார். "எங்களது தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், மோ போபட், தினேஷ் கார்த்திக், மாலோலன் மற்றும் ஓம்கார் சால்வி ஆகியோரின் கூட்டு உழைப்புதான் இந்த வெற்றிக்குக் காரணம். ஏலத்திற்கு முன்பாகவே அவர்கள் அணியைச் சமபலத்துடன் கட்டமைத்த விதம் அபாரமானது" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
