லண்டன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பதற்கு அந்த அணியின் உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ பிஎல்சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 17,128 கோடி ரூபாய்க்கு, அமெரிக்க மதிப்பில் 2 பில்லியன் டாலருக்கு விற்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் நடந்த அவசரகதி வெற்றி விழாக் கொண்டாட்டத்துக்கு இந்த விற்பனை முடிவும் ஒரு காரணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா இல்லையா? எனவும் சிலர் குழம்பிப் போயிருக்கலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விஜய் மல்லையா துவங்கியிருந்தாலும், அந்த அணியின் முழு உரிமை தற்போது டியாஜியோ நிறுவனத்திடம் உள்ளது. விஜய் மல்லையாவின் முன்னாள் நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இயங்கி வருகிறது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான ஷேர்களை 2012 ஆம் ஆண்டு டியாஜியோ வாங்கியது. டியாஜியோ ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் ஆகும்.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பை வென்றதை அடுத்து, அந்த அணியின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது. இதை பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு டியாஜியோ நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மதிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இது மிகவும் அதிகப்படியான மதிப்பீடாகும். எனினும், இந்த மதிப்புக்கு அந்த அணியை விற்பதற்கு டியாஜியோ நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 2 பில்லியன் டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 17,128 கோடி ரூபாய் ஆகும். எனினும், இது பேச்சுவார்த்தை அளவிலேயே இருப்பதாகவும், விளையாட்டுத் தொடர்பான வியாபார சந்தையில் உள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் இது தொடர்பான தகவல்கள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், டியாஜியோ நிறுவனம் இந்த விற்பனை தொடர்பான தகவலுக்கு கிடைக்கும் எதிர்வினையை வைத்து அடுத்த முடிவை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விற்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் நேர்ந்தது. 11 பேர் உயிரிழந்திருந்தனர். அப்படி ஒரு வெற்றி விழாவை கோப்பை வென்ற மறுநாளே கொண்டாட வேண்டும் என என்ன அவசரம் என்பது குறித்து நாம் ஆய்வு செய்து வெளியிட்ட கட்டுரையில், இதுபோன்ற வெற்றி கொண்டாட்டங்களின் மூலம் அணியின் மதிப்பை உயர்த்துவதற்கான திட்டம் இருக்கலாம் என்று கூறியிருந்தோம்.
நாம் எழுதியதை போலவே தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பீட்டை உயர்த்தி விற்பதற்கான முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. இது எளிதில் நடக்கக் கூடிய வியாபாரமாக இருக்காது. எனினும், ஐபிஎல் தொடரின் மதிப்பு உலக அளவில் உயர்ந்து இருக்கிறது. உலகின் மற்ற அதிக வியாபார சந்தையை வைத்திருக்கும் விளையாட்டுத் தொடர்களை ஐபிஎல் நெருங்கி விட்டது.
வரும் காலத்தில் உலகிலேயே அதிக மதிப்புமிக்க தொடராக ஐபிஎல் மாறும். இதை கருத்தில் கொண்டு உலகின் பெரும் பணக்காரர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வாங்க முன் வரக்கூடும். இந்த ஆர்சிபி அணி விற்கப்படுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.