ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பந்துவீசி, அணியின் வெற்றி நாயகனாக வலம் வந்த யாஷ் தயாளுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியதாக ஒரு பெண் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு இளம் கிரிக்கெட் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில், ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள், அவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.

சில வாரங்களுக்கு முன்பு, காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், யாஷ் தயாள் தன்னை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
அந்த வழக்கின் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கிரிக்கெட்டில் பெரிய ஆளாக்கிவிடுவதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளம் பெண் கூறியுள்ளார்.
அந்தப் பெண் பாதிக்கப்பட்ட போது 17 வயதே ஆனவர் என்பதால், இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் கடுமையான சட்டப்பிரிவு என்பதால், யாஷ் தயாளுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. முதல் வழக்கில் கைதாவதில் இருந்து தற்காலிகமாக தப்பித்தாலும், இந்த போக்சோ வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்த அடுக்கடுக்கான பாலியல் புகார்களால், யாஷ் தயாளின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. புகார்கள் உறுதியானால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. மைதானத்தில் ஹீரோவாக ஜொலித்த ஒரு வீரர், அடுத்தடுத்து பாலியல் புகார்களில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.