பெங்களூர்: ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனில் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் கோப்பையில் கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியதால் இந்த திறந்தவெளி பேருந்து வெற்றி பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதனை அடுத்து பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட ஆர் சி பி அணி முடிவு எடுத்தது. இந்த சூழலில் ஆர் சி பி அணியின் இந்த வெற்றியை பெங்களூர் மக்கள் நேற்று இரவில் இருந்து கொண்டாடி வந்தனர்.

ஒரு லெவலுக்கு மேல் கொண்டாட்டம் கை மீறி சென்றது. ஆர் சி பி அணியின் ரசிகர்களை பார்க்க வேண்டும் என ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி அவசர அவசரமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி தன்னுடைய உரையை மிகவும் சுருக்கமாக முடித்துக் கொண்டார். விராட் கோலி மிகவும் சோகமான நிலையில் காணப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, இந்த கோப்பை ரசிகர்கள் உங்களுக்கானது தான். இந்த அழகான நகரத்திற்காக தான். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.ஆர் சி பி அறிமுக நிகழ்ச்சியில் நான் ரஜத் பட்டிதாரை அறிமுகப்படுத்திய போது அவருக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சொன்னேன்.
அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆர் சி பி அணியை வழிநடத்த போகிறார் என்பது மட்டும் நிச்சயம். என் வாழ்நாளில் எந்த ஒரு அணிக்கும் இது போல் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை நான் பார்த்ததே கிடையாது என்று கூறி பேசினார். இதனை தொடர்ந்து பேசிய ஆர் சி பி கேப்டன் ரஜத் பட்டிதார், நமஸ்காரம் பெங்களூர் என்ன கன்னட மொழியில் தனது உரையை ஆரம்பித்த ரஜத் பட்டிதார், இது எங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தருணம்.
இந்த சீசன் தொடக்கத்திலிருந்து நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் போட்டிகளை அனுகினோம். இந்த கோப்பை உங்களுக்கு உரித்தானது. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கின்றோம் என்று கூறி தனது உரையை முடித்தார். இதனை அடுத்து ஆர்சிபி வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறினர்.