கொழும்பு: இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா தங்கை திருமணத்தில் கண்ணீருடன் அன்பை வெளிப்படுத்திய வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக ட்ரெண்டாகி வருகிறது.
ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர் சாஹலை தவிர்த்துவிட்டு, இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது ஆர்சிபி அணி. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மட்டும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் ஆர்சிபி ரசிகர்களின் பாராட்டுகளை வனிந்து ஹசரங்கா பெற்றார். அதேபோல் ஒவ்வொரு முறையும் ஹசரங்கா விக்கெட் வீழ்த்தும் போது, கைகளை ஆட்டி கொண்டாடுவது ரசிகர்களுக்கு பிடித்த கொண்டாட்டங்களில் ஒன்றாக மாறி வருகிறது. அண்மையில் நடந்த எல்பிஎல் தொடரில் கூட அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஹசரங்கா சாதனை படைத்தார். தற்போது ஆசியக் கோப்பைத் தொடருக்காக ஹசரங்கா தீவிரமாக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் ஹசரங்காவின் தங்கை சாத்து டி சில்வாவின் திருமணம் கொழும்புவில் நடைபெற்றது. இதில் அண்ணனாக ஹசரங்கா தங்கையின் திருமணத்தில் முன்நின்று அனைவரையும் வரவேற்றார். இந்த நிலையில் திருமணம் முடிந்த பின், தங்கை கிளம்பும் போது ஹசரங்கா உணர்வுப்பூர்வமாக காணப்பட்டார். அப்போது அவரின் தங்கை அருகில் வர, கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் ஹசரங்கா கண்ணீர் விட்டு அன்பை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து ஹசரங்காவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற அவரின் தங்கையும் கண்ணீர் விட, உறவினர்கள் அனைவரும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த தமிழ்நாடு ரசிகர்கள், தங்கையின் திருமணத்தில் கண்ணீர் சிந்தாத அண்ணன் இந்த உலகிலேயே இல்லை என்றும், கடல் கடந்தாலும் அண்ணன் - தங்கை பாசத்தில் வேறுபாடு இருக்காது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.