லண்டன்: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வில் ஜாக்ஸ், இங்கிலாந்தில் நடந்து வரும் டி20 லீக் தொடரில் ஒரே ஓவரில் 31 ரன்கள் விளாசியுள்ள சம்பவம் பெங்களூரு அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர் வில் ஜாக்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டரான இவர் ஆர்சிபி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக காயம் காரணமாக வில் ஜாக்ஸ் விலகினார். இவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் பிரேஸ்வெல் ஆர்சிபி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்த வில் ஜாக்ஸ் இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வரும் வைடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் விளையாடி வருகிறார். சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வில் ஜாக்ஸ், நேற்றைய ஆட்டத்தில் செய்த சம்பவத்தால் ஆர்சிபி அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக எதிராக போட்டியில் களமிறங்கிய வில் ஜாக்ஸ், ஹால்மேன் வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 11வது ஓவரில் மட்டும் 31 ரன்கள் விளாசப்பட்டது. சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 45 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 96 ரன்கள் விளாசி அசத்தினார். இவரின் அதிரடி காரணமாக சர்ரே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது.
இதனால் 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டரான வில் ஜாக்ஸை ஆர்சிபி அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெங்களூரு அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு முறையும் ஈ சாலா கப் நம்தே என்று கூறி வரும் ஆர்சிபி ரசிகர்கள், அந்த அணி தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.