லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் பங்கேற்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் (UPCA) இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆகஸ்ட் 22 அன்று அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. அதனால், உபி டி20 லீக் தொடரில் விளையாட அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்த தகவலும் இல்லை. மறைமுகமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் உ.பி.யைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது சமீப காலமாக பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன. முதலில், காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தயாள் மீது புகார் அளித்தார்.
இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம், தயாளை உடனடியாகக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர், யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் முன்னேற உதவுவதாகக் கூறி, ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி தயாள் தாக்கல் செய்த மனுவை ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் தான், உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக் தொடரில் விளையாட யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான ஏலத்தில் கோரக்பூர் லயன்ஸ் அணி, யாஷ் தயாளை 7 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தது.
தற்போது, வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அவரை அணியில் சேர்க்க வேண்டாம் என கோரக்பூர் அணிக்கு உ.பி. கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து பாலியல் வழக்குகளில் சிக்கியுள்ளதால், ஐபிஎல் வீரர் யாஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.