லக்னோ: ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்போது யாஷ் தயாள் அந்தப் பெண் மீது காவல் நிலையத்தில் எதிர் புகார் அளித்துள்ளார். இது இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்த யாஷ் தயாள், பிரயாக்ராஜ் காவல் துறையிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குல்தாபாத் காவல் நிலையத்தில் இந்தப் புகாரை யாஷ் அளித்துள்ளார். ஊடகங்களில் வெளியாகி இருக்கும் அந்த தகவலின்படி, அந்தப் பெண் தனது ஐபோன் மற்றும் மடிக்கணினியை திருடிவிட்டதாக யாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு இருவரும் பழகத் தொடங்கினர் என்றும் யாஷ் தயாள் பிரயாக்ராஜ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பெண் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டதாகவும், திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் இதுவரை அது நடக்கவில்லை என்றும் யாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், ஷாப்பிங் செய்வதற்காகவும் அந்தப் பெண் தன்னிடம் பணம் வாங்கியதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் யாஷ் கூறியுள்ளார். காஜியாபாத் காவல்துறையிடம் அந்தப் பெண் தனக்கு எதிராகப் புகார் அளித்ததை அறிந்த பின்னரே, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாக யாஷ் தெரிவித்தார்.
மூன்று பக்கப் புகாரில், அந்தப் பெண் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் உட்பட பலருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு யாஷ் கோரியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. யாஷ் தயாள் (27) மீது ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை, இந்திராபுரம் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 69 - திருமணம் குறித்த தவறான வாக்குறுதி உட்பட வஞ்சகமான வழிகளில் பாலியல் உறவு - என்ற பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
ஐந்து வருடங்களாக யாஷுடன் உறவில் இருந்ததாகவும், அவர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும்,ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டி, ஜூன் 21 அன்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஐஜிஆர்எஸ் (ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் அமைப்பு) மூலம் அந்தப் பெண் புகார் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.