
சாஹல் வீட்டில் கொரோனா
ஐபிஎல் தொடருக்கு பின்னர் வீடு திரும்பிய ஆர்சிபி வீரர் யுவேந்திர சாஹலுக்கு வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதியான விஷயம் தான் அது. தாய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரின் தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இந்த சூழலிலும் சஹால் கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.

வேண்டுகோள்
பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் கெட்டோ என்ற தன்னார்வ அமைப்பின் வலைதளம் மூலம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதில், எனக்கு நெருங்கிய தோழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியு-வில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் மருத்துவ செலவுகளை இவ்வளவு நாட்கள் சமாளித்து வந்த நிலையில் மேலும் ரூ. 4 லட்சம் தேவைப்படுகிறது. எனவே தயவுக்கூர்ந்து யாரேனும் உதவுங்கள் எனக்கேட்டிருந்தார்.

நிதியுதவி
இதனை அறிந்த யுவேந்திர சஹால், உடனடியாக அந்த அமைப்பின் வலைதளத்தில் ரூ. 2 லட்சத்தை நிவாரமாக வழங்கியுள்ளார். இதனை அவர் இரண்டு கட்டமாக பிரித்து கொடுத்துள்ளார். சாஹல் இதற்கு முன்னர் இதே அமைப்பிற்காக விராட் கோலி செய்த நிதி திரட்டல் முயற்சிக்கு ரூ.95,000 கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜ ஹீரோ
தனது குடும்பம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதும், சிரமத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு சஹால் நிதியுதவி செய்துள்ளது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. ஆனால் பெற்றோருடன் தொடர்பில் இருந்த சாஹலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா, தனிமைப்படுத்தப்பட்டாரா என்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











