பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இதனை கொண்டாடும் விதமாக பெங்களூரில் விழா ஒன்றுக்கு ஆர் சி பி அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது ஆர்சிபி அணியின் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாக பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக rcb அணி மற்றும் கர்நாடகா கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆர் சி பி வெற்றி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி அஸ்வினி என்ற பெண் உயிரிழந்தார். இந்த நிலையில் அஸ்வினியின் தாய் தற்போது போலீசாரிடம் ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அதில் தனது மகள் காதில் தங்கத்தில் ஆன தோடு ஒன்றை அணிந்திருந்ததாகவும், அவர் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை போலீசார் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனைக்கு பின்பு அஸ்வினியின் சடலத்தில் அந்த தோடு இல்லை என்றும் இதனை கண்டுபிடித்து தரும்படி அஸ்வினியின் தாய் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
அஸ்வினியின் தாய் மாமா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆசையாக அவருக்கு இந்த தங்கத் தோடை வாங்கி கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சடலத்தில் இருந்த நகையை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்ட போது திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறதா என்று பலரும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சடலத்தை கூடவா விட்டு வைக்க மாட்டார்கள் என்றும் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்
இதனிடையை நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் இந்த வழக்கில் போலீசார் செய்த தவறுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கர்நாடகா அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி கடைசி நிமிடத்தில் கோரிக்கை வைத்ததாகவும் இதற்கு போலீசார் ஏதோ ஆர் சி பி அணியின் ஊழியர்கள் போல் பாதுகாப்பு பணியை கடைசி நிமிடத்தில் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது தவறு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.