ஐதராபாத்: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 62 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விராட் கோலி 6வது சதத்தைன் விளாசியதோடு, ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி வெறும் 341 ரன்களை மட்டுமே விராட் கோலி அடித்தார். ஆனால் நடப்பு சீசனில் 13 போட்டிகளில் மொத்தமாக 538 ரன்களை விளாசியுள்ளார்.

அதேபோல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியுடன் களமிறங்கியது. அந்தப் போட்டியில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 23ல் நடைபெற்ற போட்டியிலும் டக் அவுட்டாகினார். அதேபோல் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டானார்.இதனால் விராட் கோலிக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ராசியே இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.
ஆனால் விராட் கோலிக்கு ராசியான நாளாக மே 18ஆம் தேதி அமைந்துள்ளது. மே 18ஆம் தேதியான நேற்று ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார். அதேபோல் 2016ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 8 தையல்களுடன் சதம் விளாசி அசத்தி இருந்தார். அதேபோல் 2015ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 18 பந்துகளில் 44 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
அதேபோல் விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 தான். இது விராட் கோலி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் போட்டியிலும் விராட் கோலி சதத்தை விளாசி அசத்தியுள்ளார். இதனால் இன்னும் சில வாரங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதம் விளாசி மீண்டு கிங் என்று உலகுக்கு நிரூபிப்பார் என்று விராட் கோலி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.