செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் அதிரடி வீரருமான ரொமாரியோ ஷெப்பர்ட், கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் நம்பமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், ஒரே ஒரு சட்டப்பூர்வமான பந்தில் 22 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்துள்ளார்.
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த அசாத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. போட்டியின் 15-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தான் இந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியது.

பந்துவீச்சாளர் ஒஷேன் தாமஸ் முதலில் ஒரு நோ-பால் வீசினார். அதற்கு 1 ரன் கிடைத்தது. அடுத்த பந்தை வைடாக வீசினார். அதற்கும் 1 ரன் கிடைத்தது. மீண்டும் ஒரு நோ-பால் வீச, அந்த பந்தை ஷெப்பர்ட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் (மொத்தம் 7 ரன்கள்).
ஃப்ரீ ஹிட்டாக வீசப்பட்ட அடுத்த பந்தும் நோ-பாலாக அமைய, அதையும் ஷெப்பர்ட் சிக்ஸருக்குத் தூக்கினார் (மொத்தம் 7 ரன்கள்). இறுதியாக, அந்த ஓவரின் மூன்றாவது சட்டப்பூர்வமான பந்தை தாமஸ் வீச, அதையும் ஷெப்பர்ட் சிக்ஸர் விளாசினார் (6 ரன்கள்). ஆக, தொடர்ச்சியாக மூன்று நோ-பால்கள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் மூலம், ஒரே ஒரு சட்டப்பூர்வ பந்தில் மட்டும் 22 ரன்கள் குவிக்கப்பட்டன.
2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய ரொமாரியோ ஷெப்பர்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் மிரட்டினார். அது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதமாகும். தனது அதே அதிரடி ஃபார்மை சிபிஎல் தொடரிலும் அவர் தொடர்ந்து வருகிறார்.
இந்தப் போட்டியில் 7-வது வீரராகக் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட், வெறும் 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். இருப்பினும், அவரது இந்த அதிரடி ஆட்டம் வீணானது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகரமாக சேஸ் செய்தது.