கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் துவக்க விழாவிலேயே இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது எந்த அணி என்பதை சூசகமாக கூறி இருப்பதாகவும், அதன் மூலம் ஐபிஎல் தொடரின் "ஸ்கிரிப்ட்" வெளியாகி இருப்பதாகவும் ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது 18 வது ஆண்டை எட்டி இருக்கிறது இந்தத் தொடர். இதை ஒட்டி துவக்க விழாவில் "ஐபிஎல் 18" என்ற ஞாபக பரிசு ஒன்று பிசிசிஐ சார்பில் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

மொத்தம் 10 அணிகளும், பல்வேறு நட்சத்திர வீரர்களும் இருக்கும் நிலையில் எதற்காக விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பதற்கு ஒரு பின்னணியும் சொல்லப்பட்டது. விராட் கோலியின் ஜெர்சி எண் 18 ஆகும். அதனால் அவரது எண்ணை குறிக்கும் ஐபிஎல் 18 என்ற ஞாபகச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டது என கூறப்பட்டது.
ஆனால், ரசிகர்கள் இதற்கு மற்றொரு பார்வையையும் வழங்கி வருகின்றனர். அதாவது விராட் கோலியின் எண் 18, அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் 18 ஆண்டுகளாக இதுவரை கோப்பை வெல்லவில்லை.
எனவே, அந்த அணிதான் இந்த முறை கோப்பை வெல்ல உள்ளது. அதாவது விராட் கோலியின் எண்ணான 18 என்பதை குறிக்கும் 18 வது ஆண்டில் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல உள்ளது. அதைத்தான் ஞாபக சின்னத்தை வழங்கி சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என சில ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜெய் ஷா தான் ஐபிஎல் தொடரின் ஸ்கிரிப்ட்டை எழுதி வருகிறார் எனவும், அனைத்து போட்டிகளும் முன்பே முடிவு செய்யப்பட்டவை எனவும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாவது உண்டு. அது போன்றது தான் இதுவும். ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பு எந்த அணி வெற்றி பெறப் போகிறது என தற்போது ரசிகர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளனர். இது நடக்கிறதா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.