பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று பல ஆண்டு கனவை நிறைவேற்றியது. ஆனால் இந்த வெற்றியை மனதால் கொண்டாட முடியாத அளவுக்கு பல பிரச்சனைகள் தற்போது ஆர்சிபி வீரர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கு அனைத்துக்கும் காரணம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி தங்களது வெற்றியை கொண்டாடுகிற போது நடந்த பிரச்சனைதான். மைதானத்திற்கு முன் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர் இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆர்சிபி நிர்வாகி ஒருவரை கைது செய்து இருக்கின்றனர். அதேபோன்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து இருக்கின்றது. கர்நாடகா போலீசார் அனுமதி வழங்காத நிலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதே அசம்பாவிதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு புஷ்பா 2 திரைப்படம் ஹைதராபாத்தில் வெளியான போது நடிகர் அல்லு அர்ஜுனனை பார்க்க வந்த பெண் ஒருவர் கூட்டு நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் இதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் எனக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதே போல் விராட் கோலியை பார்க்க தான் ரசிகர்கள் பலரும் கூடியதால், இந்த விவகாரத்தில் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இன்று அரெஸ்ட் கோலி என்ற ஹேஷ் டேக் சமூக வலைத்தளத்தில் காலை முதலே தீவிரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதில் கூட்டம் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி இந்த நிகழ்ச்சியை வீரர்கள் ரத்து செய்து இருக்க வேண்டும். ஆனால் வீரர்கள் கொஞ்சம் கூட அதைப்பற்றி யோசிக்காமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதே பிரச்சனைக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களை கைது செய்யுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கூறி வருகின்றனர். அல்லு அர்ஜுனுக்கு ஒரு நியாயம் விராட் கோலிக்கு ஒரு நியாயமா என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.