பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத்திலிருந்து பெங்களூருக்கு விரைந்துள்ளது. பெங்களூரில் திறந்தவெளிப் பேருந்தில் ஊர்வலம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டதாக பெங்களூரு நகர காவல்துறை அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சமூக வலைதள பக்கத்தில் 5 மணிக்கு ஊர்வலம் நடைபெறும் என கூறப்பட்டு இருக்கிறது. இரண்டு தரப்பில் இருந்தும் வெவ்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். அதே சமயம், சின்னசாமி மைதானத்தை சுற்றி உள்ள சாலைகளில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருப்பதால் நிலைமை எல்லை மீறி சென்றுள்ளது.
பெங்களூரு காவல் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.

எனினும், சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அது குறித்தும் காவல் துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் மாலை 4 மணி அளவில் கர்நாடக முதல்வரை சந்திக்கின்றனர். அதன் பிறகு விதான சௌதாவிலிருந்து அருகே இருக்கும் சின்னசாமி மைதானத்திற்கு அவர்கள் செல்வார்கள். அப்போது திறந்தவெளி ஊர்வலம் எதுவும் நடத்தப்படாது; மைதானத்திற்குள் பாராட்டு விழா நடைபெறும்.
அந்தப் பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டுமெனில், உரிய டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என காவல்துறை கூறியுள்ளது. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை விதான சௌதா மற்றும் சின்னசாமி மைதானத்தை ஒட்டியிருக்கும் சாலைகளை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை என்பதால் காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி விழாவில் பங்கேற்க வேண்டுமெனில், இந்த விழாவுக்கான டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி ஊர்வலம் நடக்கும் என கூறி உள்ளது.