பெங்களூர்: பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடத்திய வெற்றிக் கொண்டாட்டம் எப்படி துயர சம்பவமாக மாறியது என்பது பற்றியும், தங்களின் எச்சரிக்கையை ஆர்சிபி அணி புறக்கணித்தது பற்றியும் கர்நாடக காவல்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டிருந்ததால், நகரத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஆர்சிபி நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு, அறிவுறுத்தப்பட்டதாகக் கூறி இருக்கிறார். அந்தக் கருத்தைக் கேட்டிருந்தால், 11 உயிர்களைக் காவு வாங்கிய பயங்கர கூட்ட நெரிசலைத் தவிர்த்திருக்க முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 ஐபிஎல் கோப்பையை முதன்முறையாக வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட, ஜூன் 4 அன்று மறுநாள் முழு அணியும் பெங்களூரு திரும்பியது.
அவர்கள் ஒரு திறந்த பஸ்ஸில் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர், அதைத் தொடர்ந்து சின்னசாமி மைதானத்திற்குள் கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்தன. ஆனால், மைதானத்திற்கு வெளியே கட்டுப்படுத்த முடியாத கூட்டம் காரணமாக பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதா?
டெக்கான் ஹெரால்டு செய்திப்படி, ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்ததாகவும், அதை சுட்டிக் காட்டி புதன்கிழமை அன்று பெங்களூரில் அந்த வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தை நடத்துவதற்கு ஆர்சிபி-யை கர்நாடக போலீஸ் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
"புதன்கிழமை எந்தக் கொண்டாட்டங்களையும் நடத்த வேண்டாம் என்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் அரசு மற்றும் ஆர்சிபி உரிமையாளர்களை நாங்கள் தடுக்க முயற்சித்தோம். இது மோசமான செயல் என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம். மேலும், ரசிகர்களின் உணர்ச்சிகள் தணிந்த பிறகு, அடுத்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்வை நடத்த பரிந்துரைத்தோம்.
எந்த ஊர்வலத்தையும் நடத்த வேண்டாம், ஆனால் ஒரே இடத்தில், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடத்தவும். வீரர்களை மைதானத்திற்கு அழைத்து வந்து அங்கேயே விழாவை முடித்துக்கொள்ளுமாறும் நாங்கள் அவர்களிடம் கூறினோம்," என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
மாறாக, ஞாயிற்றுக்கிழமைக்கு அவர்கள் அனுமதி அளித்தனர், ஆனால் வெளிநாட்டு வீரர்கள் அதற்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று அணி நிர்வாகம் வாதிட்டது. இறுதிப் போட்டி அன்று தங்கள் படையினர் காலை 5:30 மணி வரை பணியில் இருந்ததால், அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது என்றும் காவல்துறை கூறியுள்ளது.
"வீரர்கள், குறிப்பாக வெளிநாட்டவர்கள், இன்று அல்லது நாளை வெளியேறிவிடுவார்கள் என்று அவர்கள் வாதிட்டனர். இயற்கையாகவே, அரசு அதைப் பயன்படுத்தி ஆதாயம் தேட விரும்பும். அரசு மறுத்திருந்தால், அது மற்றொரு வகையான குழப்பத்திற்கு வழிவகுத்திருக்கும். செவ்வாய்க்கிழமை அன்று, போலீஸ் கமிஷனர் முதல் காவலர்கள் வரை எங்கள் அனைத்துப் பணியாளர்களும் காலை 5.30 மணி வரை வீதிகளில் இருந்து முற்றிலும் சோர்வடைந்திருந்தனர். இது முழு பைத்தியக்காரத்தனம். இதுபோன்ற வெறியை நாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
ஆர்சிபி கடைசி நேரத்தில் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தை ரத்து செய்ய முடிவு செய்தது, ஆனால் சேதம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடியது, இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது, இதில் 11 அப்பாவி மற்றும் இளம் ரசிகர்கள் உயிரிழந்தனர்.
மைதானத்திற்கு வெளியே நடந்த நிகழ்வுகள் பற்றி அறிந்த பிறகு தங்கள் திட்டத்தை மாற்றியமைத்ததாகவும், அனைத்து பொது நெறிமுறைகளையும் பின்பற்றியதாகவும் அணி நிர்வாகம் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டது. கர்நாடக அரசும், பிசிசிஐயும் இவ்வளவு பெரிய கூட்டத்தை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்று கூறி பொறுப்பேற்க மறுத்துவிட்டன.