பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்க உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது பயிற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி, ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி அசத்தினர். க்ருணால் பாண்டியா மற்றும் வெங்கடேஷ் ஐயர் தலைமையில் ஆர்சிபி வீரர்கள் 2 அணிகளாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி ஆட்டத்தில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா வெறும் 37 பந்துகளில் 81 ரன்களைக் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சீசனிலும் அவர் சிறந்த ஃபினிஷராகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் 14 பந்துகளில் 36 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 30 ரன்களும் குவித்து மிரட்டினர்.

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். தொடக்கம் முதலே அவர் சிறப்பான ரிதமில் காணப்பட்டார். அவரது அதிரடியான ஷாட்டுகள் மற்றும் பேட்டிங் அணுகுமுறை அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்தப் போட்டியில் ஆடிய அதிரடி ஆட்டத்தை அடுத்து வெங்கடேஷ் ஐயருக்கு ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையில் சரியான இடத்தை வழங்க ஆர்சிபி நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பயிற்சி ஆட்டம் குறித்து திங்கள்கிழமை காலையில் ஆர்சிபி அணி ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அதில் பேசிய க்ருணால் பாண்டியா, "இது ஒரு மிகச்சிறந்த பயிற்சி ஆட்டமாக அமைந்தது. புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங் மற்றும் மங்கேஷ் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டனர். பேட்டிங்கில் ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்" என்று தெரிவித்தார்.

கடந்த 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை வென்றது. அந்த வெற்றி வெறும் அதிர்ஷ்டம் அல்ல என்பதை நிரூபிக்க, இந்த சீசனிலும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது. தங்களது முதல் 2 போட்டிகளைச் சொந்த மண்ணான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் ஆர்சிபி, அதன்பிறகு கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் எதிர்கொள்ள உள்ளது.
