பெங்களூர்: சிஎஸ்கே அணியுடனான ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், ஆடு பலியிட்டு அதன் இரத்தத்தால் விராட் கோலி போஸ்டருக்கு அபிஷேகம் செய்து வீடியோ வெளியிட்ட 3 ரசிகர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், பல்வேறு தரப்பினரும் ஆர்சிபி ரசிகர்களை கடுமையான விமர்சித்து வருகின்றனர்.
அண்மைக் காலங்களில் ஆர்சிபி அணி ரசிகர்களின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. விராட் கோலியை போல் எதற்காக ஆக்ரோஷமாக கத்துகிறோம் என்று தெரியாமல், ஆர்சிபி ரசிகர்களும் சாதாரண வெற்றியை கூட அதீத உணர்ச்சி மிகுதியில் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் சிஎஸ்கே அணியுடனான வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே சின்னச்சாமி மைதானத்தில் இருந்து வெளியில் வந்த பின் சிஎஸ்கே ஜெர்சியுடன் இருந்த ரசிகர்களை, ஆர்சிபி ரசிகர்கள் அடிக்க பாய்ந்து துன்புறுத்தினர். இன்னொரு பக்கம் சிஎஸ்கே பெண் ரசிகைகளை ஆர்சிபி ரசிகர்களால் கும்பலாக நின்று வழிமறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, சிக்கலை ஏற்படுத்தினர். கடந்த சீசன் முதலே ஆர்சிபி அணி ரசிகர்கள் இதுபோன்ற மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியாத விரக்தியில் ரசிகர்கள் இப்படி செயல்படுவதாக மற்ற அணிகளின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்சிபி ரசிகர்களின் எல்லை மீறிய செயல்பாடுகள் அடுத்தக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
இதனை கொண்டாடும் வகையில் சித்ரதுர்கா பகுதியில் 3 ரசிகர்கள் ஆடு பலி கொடுத்து கொண்டாடி இருக்கின்றனர். விராட் கோலியின் போஸ்டர் முன்பாக ஆடு பலி கொடுத்து அதன் இரத்தத்தை விராட் கோலியின் போஸ்டருக்கு அபிஷேகம் செய்ததோடு, ஆர்சிபி வீரர்கள் அடங்கிய போஸ்டருக்கும் அபிஷேகம் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், பல்வேறு தரப்பினரும் ஆர்சிபி ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சித்ரதுர்கா பகுதியில் ஆடு பலியிட்டு கொண்டாடாட்டத்தில் ஈடுபட்ட ஆர்சிபி ரசிகர்களான சனா பாலையா, ஜெயண்ணா மற்றும் திப்பே சுவாமி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.