சென்னை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை கைப்பற்றியது எப்படி? என்ற கேள்வியே ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதமாக உள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று "ஆர்சிபி, ஆர்சிபி" என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. சிஎஸ்கே ரசிகர்களால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்சிபி துவக்கம் முதலே பேட்டிங்கிலும் பின்னர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

ஆர்சிபி ரசிகர்கள் சேப்பாக்கத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பியதற்கும், சிஎஸ்கே ரசிகர்களால் அதுபோன்ற கோஷத்தை எழுப்ப முடியாமல் போனதற்கும் போட்டி சூழ்நிலையும் முக்கிய காரணம் என்றாலும், மைதானத்தில் அத்தனை ஆர்சிபி ரசிகர்கள் எப்படி வந்தார்கள்? என்பது மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.
அது குறித்து விசாரித்த போது, ஆன்லைன் புக்கிங் மூலம் நேர்ந்த விஷயம் இது என குறிப்பிடுகிறார்கள். இதற்கு முந்தைய காலகட்டங்களில் ஐபிஎல் தொடருக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முழு அளவில் விற்கப்படாது. குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே ஆன்லைனில் விற்கப்படும். மற்ற டிக்கெட்டுகள் மைதான வாயிலில் நேரில் விற்கப்படும். அதனால், உள்ளூர் ரசிகர்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்குவார்கள். ஆனால் இந்த முறை பெரும் அளவிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டன. அதற்கு காத்திருப்பு முறையும் இருந்தது.
டிக்கெட் விற்பனை நாளன்று குறிப்பிட்ட இணைய தளம் மற்றும் செயலியில் சென்று பார்த்தபோது சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அவர்களுக்கு முன்பே ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருப்பில் இருந்தனர். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தான் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்பதால், எப்படியும் தங்களால் டிக்கெட்டை வாங்க முடியாது என்ற சோகத்தில் பலரும் அதில் காத்திருக்கும் முயற்சியையும் கைவிட்டனர்.
இந்த நடைமுறையால் சிஎஸ்கே அணி ஆடும் போட்டிக்கு எதிரணி ரசிகர்களும் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கி இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் நாம் கணிசமான அளவில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை மைதானத்தில் பார்க்க முடிந்தது.
ஆனால், அதைக் காட்டிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் அதிக அளவில் இருந்தனர். மும்பையில் இருந்து சென்னை வருவதற்கு அதிக நேரம் ஆகும். அதே சமயம் பெங்களூரில் இருந்து சென்னை வருவது மிகவும் சுலபம். அதனால், பெங்களூரைச் சேர்ந்த ரசிகர்கள் பலரும் ஆன்லைனில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதனால் தான் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக அளவில் ஆர்சிபி ரசிகர்கள் இருந்துள்ளனர். மேலும், போட்டியிலும் ஆர்சிபி அணி ஆதிக்கம் செலுத்தியதால் அவர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டு தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.