பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர் விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். முதலில் அவர் கொடுத்த கேட்ச்சை சிஎஸ்கே வீரர் டேரில் மிட்செல் பவுண்டரி கோட்டுக்கு பின்னே நின்று பிடித்ததாக எண்ணி விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, "கோலி அவுட் இல்லை" என தனக்கு அருகில் இருந்தவர்களிடம் கூறினார்.
ஆனால், விராட் கோலிக்கு அம்பயர் அவுட் கொடுத்து அவர் வெளியேறிய பின்னரே அனுஷ்கா சர்மாவுக்கு டேரில் மிட்செல் என்ன செய்தார் என்பது புரிந்தது. டேரில் மிட்செல் முதலில் கேட்ச் பிடித்த பின், பவுண்டரி கோட்டுக்கு வெளியே சென்ற போது பந்தை மீண்டும் உள்ளே தூக்கி வீசி பின் மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்து இருந்தார். இந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

இந்தப் போட்டியில் விராட் கோலி அதிரடியாக துவக்கம் அளித்தார். அவர் 3 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஃபாப் டுபிலேசிஸ் 39 பந்துகளில் 54 ரன்களும், ரஜத் படிதார் 23 பந்துகளில் 41 ரன்களும் குவித்தனர்.
அடுத்து தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 14 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரான் கிரீன் கடைசி வரை களத்தில் நின்று 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்து இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணி 201 ரன்கள் எடுத்து தோற்றால் கூட பிளே ஆஃப் போகும் என்ற நிலையில் சேஸிங் செய்தது.