பெங்களூர்: 18 ஆண்டுகளாக ஆர்சிபி இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் கனவு நிறைவேறும் வாய்ப்பு கைகூடி வருகிறது. இதுவ்ரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
இதன் மூலமாக இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணியாக ஆர்சிபி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதற்கு ஆர்சிபி அணியின் பவுலர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு நிகராக க்ருனால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

அதில் சுயாஷ் சர்மா இதுவரை ஆடியுள்ள 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதோடு, அவரின் எகனாமியை 7.97ஆக மட்டுமே வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஆர்சிபி அணி தனக்கு செய்த உதவி குறித்து சுயாஷ் சர்மா நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக ஹெர்னியா பிரச்சனையால் சுயாஷ் சர்மா தவித்து வந்தார்.
இதுகுறித்து சுயாஷ் சர்மா பேசுகையில், 2 ஆண்டுகளாக ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்கு முன்பாகவே ஊசிகள் போட்டே விளையாடி வந்தேன். இந்தியாவில் உள்ள மருத்துவர்களால், எனக்கு என்ன பிரச்சனை என்பதை கண்டறிய முடியவில்லை. அதன்பின் மெகா ஏலத்தில் ஆர்சிபி என்னை வாங்கினார்கள். என்னால் என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்று ஆர்சிபி அணி சிந்திக்கவில்லை.
எனது உடல்நிலை மற்றும் ஃபிட்னஸில் கவனம் செலுத்தினார்கள். உடனடியாக எனது மருத்துவ சிகிச்சைக்காக ஆர்சிபி அணி நிர்வாகம் லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போல் நடத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதன்பின் லண்டனில் எனக்கு 3 இடங்களில் ஹெர்னியா பாதிப்பு இருந்தது. இதனால் என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் வந்தது.
அதன்பின் ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே விளையாடுவோமா என்ற குழம்பினேன். ஏனென்றால் என் அறுவை சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால் விரைவாக குணமடைந்து தொடக்கம் முதலே விளையாடி வருகிறேன். அதற்காக ஆர்சிபி அணிக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இப்போது முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வலியுடன் விளையாடி வந்தேன். வலியுடன் விளையாடுவதற்கு என் உடல் பழகிவிட்டது. அதன்பின் இப்போது இன்னும் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். ஆர்சிபி அணிக்காக விளையாட வாங்கப்பட்ட போதே மகிழ்ச்சியாக இருந்தது. இங்கிருந்து ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.