பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வரும் நிலையில், இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனி - விராட் கோலி இணைந்து விளையாடும் கடைசி போட்டி என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. அது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, "நானும், தோனியும் சேர்ந்து விளையாடும் கடைசிப் போட்டி இதுவாக இருக்கலாம். இந்த பெரிய போட்டியில் தோனியை பார்ப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய தருணமாக இருக்கும். நாங்கள் இருவரும் இந்திய அணிக்காக பலமுறை கூட்டணியாக சேர்ந்து ரன் குவித்துள்ளோம். தோனி பல போட்டிகளில் கடைசி வரை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்து இருக்கிறார். அதை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம். எனவே, ரசிகர்கள் எங்கள் இருவரையும் சேர்த்து பார்ப்பது முக்கிய தருணமாக இருக்கும்" என்றார்.

தோனி குறித்து விராட் கோலி உயர்வாக பேசி இருப்பதை சுட்டிக் காட்டி தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் பிளே ஆஃப் சுற்றில் முதல் போட்டியில் வென்று பின் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இரண்டாவது தகுதிப் போட்டி அல்லது இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியால் பங்கேற்க முடியும்.
இந்தப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்வா, சாவா போட்டி ஆகும். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் ரன் ரேட்டையும் முந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அந்த அணி. இந்தப் போட்டியின் போது மழை குறுக்கிடும் என்பதால் போட்டி முழுமையாக நடக்குமா? ஒருவேளை போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டால் பெங்களூரு அணி என்ன செய்ய வேண்டும் என பல்வேறு ஊகங்களை அந்த அணியின் ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். எனவே, இரு அணி ரசிகர்களுக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாக உள்ளது.