பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் மகிழ்ச்சியுடன் இருந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கில் வேகப் பந்துவீச்சாளர்களை எளிதாக அடித்து ஆடலாம் என நினைத்த நிலையில் அவர்கள் திட்டத்தை உடைத்ததாக அக்சர் பட்டேல் கூறினார்.
மேலும், கே எல் ராகுல் அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் வரிசையில் இடம் மாறி பேட்டிங் செய்வதை குறிப்பிட்டு வெற்றிக்கு காரணம் என பாராட்டினார் டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல். இந்தப் போட்டியிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதுவும் 13 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 163 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் எட்டியது. கே.எல். ராகுல் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அது குறித்து பேசிய கேப்டன் அக்சர் படேல், "எங்கள் அணி விளையாடும் விதத்தால் அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளோம். நாங்கள் நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று இருக்கிறோம். பெங்களூர் அணி வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருந்தார்கள். அதனால் நான் சற்று முன்பே வந்து சுழற்பந்து வீசினேன். பந்து சில இடங்களில் நின்று சென்றது, சற்று பவுன்ஸும் இருந்தது. எனவே சுழற்பந்து வீச்சாளர்களை பவர் பிளேயில் அடித்து ஆடுவது சற்று கடினமாக இருந்தது."
"19-வது ஓவர் நான் செய்தது தவறுதான். ஆனாலும், நாங்கள் வெற்றி பெற்றதால் அது பற்றி கவலை இல்லை. குல்தீப் நீண்ட காலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறார். விப்ராஜ் நிகாம் பற்றி நிச்சயம் பாராட்ட வேண்டும். அவர் 18-வது ஓவரை வீசிய விதம் மற்றும் அவரது தன்னம்பிக்கை சிறப்பாக இருந்தது."
"ராகுல் பேட்டிங் வரிசையில் மேலே வருவதால் எனது வேலை எளிதாக மாறிவிட்டது. அவர் பேட்டிங் வரிசையில் இடம் மாறிக்கொண்டு இருக்கிறார். அது அத்தனை எளிதல்ல. கே.எல். ராகுல் போன்ற ஒரு நிலையான வீரர் எங்கள் பேட்டிங் வரிசையில் இருப்பது சிறந்த விஷயம். அவர் இன்று முதிர்ச்சியான ஆட்டத்தை ஆடினார். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்த பேட்டிங் ஃபார்மை இங்கும் வெளிப்படுத்தி வருகிறார்" என்றார்.