டெல்லி: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. 15 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் வந்த ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 34 ரன்களை சேர்த்தார். இதனால் கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி 54 ரன்களை குவித்தது.
ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டெல்லி அணி தரப்பில் அபிஷேக் போரெல் - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அபிஷேக் போரெல் அதிரடியாக புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் 2 சிக்ஸ் அடித்து தொடங்கினார்.

இதன்பின் ஹேசல்வுட் வீசிய 3வது ஓவரில் அபிஷேக் போரெல் 11 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து வந்த கருண் நாயர் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் டூ பிளசிஸ் - கேஎல் ராகுல் கூட்டணி நிதானமாக விளையாட தொடங்கியது. 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 52 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்தனர்.
ஸ்பின்னர்களுக்கு பிட்சில் உதவி கிடைக்க, டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாறினர். ஒரு கட்டத்தில் அடித்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, க்ருனால் பாண்டியாவை அட்டாக் செய்து டூ பிளசிஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் கேப்டன் அக்சர் படேல் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.
ஆனால் ஆர்சிபி அணி சரியான நேரத்தில் மீண்டும் ஹேசல்வுட்டை கொண்டு வந்து, அக்சர் படேலை 15 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பியது. இதனால் 15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. இதன்பின் 17வது ஓவரில் கேஎல் ராகுல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுதோஷ் அர்மா 2 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின் ஹேசல்வுட் வீசிய 18வது ஓவரில் 17 ரன்கள் சேர்க்கப்பட, யாஷ் தயாள் வீசிய 19வது ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் ஸ்டப்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது. ஆர்சிபி அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.