பெங்களூர்: நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டரும் மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆர்சிபி அணியை பொறுத்தவரை 3 பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்து ஒப்பேற்றுவார்கள். இதனால் விராட் கோலி முழு சுதந்திரத்துடன் விளையாட முடியாமல் இருந்து வந்தது. இம்முறை அதனை ஆர்சிபி அணி மாற்றி கொண்டிருக்கிறது.
டாப் ஆர்டரில் பில் சால்ட், விராட் கோலி, படிக்கல் ஆகியோரையும், கேப்டன் ரஜத் பட்டிதார் நம்பர் 4 வரிசையிலும் களமிறக்கி வருகிறார்கள். இதன்பின் மிடில் ஆர்டரில் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா ஆகிய 4 பேட்ஸ்மேன்களும் விளையாடி வருகிறார்கள். இதனால் விராட் கோலி ரன்கள் சேர்க்கவில்லை என்றாலும், அந்த அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மூலமாகவே ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் விளாசியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதிலும் ஃபினிஷராக களமிறங்கும் ஜித்தேஷ் சர்மா இந்த சீசனில் அதிரடியில் வெளுத்து வாங்குகிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.
தினேஷ் கார்த்திக் விட்டுச் சென்ற இடத்தை எளிதாக ஜித்தேஷ் சர்மா நிரப்பியுள்ளார். இந்த நிலையில் ஆர்சிபி அணியில் கம்பேக் கொடுப்பதற்கு தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக அமைந்ததாக ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜித்தேஷ் சர்மா பேசுகையில், ஐபிஎல் பயணம் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின், தினேஷ் கார்த்திக் உடன் பணியாற்றி வந்தேன். நான் இப்போதும் விளையாடும் ஷாட்கள் ஏராளமானவை, தினேஷ் கார்த்திக் ஆடிய ஷாட்கள்தான். அவர் என்னை புதிய வீரராக மாற்றி வருகிறார். என்னால் மைதானத்தில் 360 டிகிரியிலும் ஷாட்களை விளையாட முடியும் என்று நம்பிக்கையுடன் பயிற்சி அளிக்கிறார்.
கடந்த சீசன் எனக்கு மோசமான ஒன்றாக அமைந்தது. மனநிலையில் சரியாக இல்லை. எதிர்காலத்தை பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன். தினேஷ் கார்த்திக்கை சந்தித்து இதுகுறித்து பேசிய போது, அவர் எல்லா மனிதர்களும் செய்யும் தவறுதான். இது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை. அனைவருக்கும் நடக்கக் கூடிய தவறுகள் தான்.
அதேபோல் என்னுடைய நம்பிக்கை எப்போதும் எவ்வளவு ரன்கள் அடிக்கிறேன் என்பதில் வைக்க மாட்டேன். எப்படி தயாராகிறேன், எப்படி பயிற்சி செய்கிறேன் என்பதை பொறுத்தே அமையும். ஒருவேளை நான் அடிக்கும் ரன்களில் நம்பிக்கை வைத்தால், அது எப்போதும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அதேபோல் பயிற்சியின் போது அதீத நம்பிக்கையுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.