பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 147 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூரு அணி முதல் 6 ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளை அடித்து 92 ரன்களை சேர்த்து இருந்தது.
வெற்றிக்கு 148 ரன்கள் தேவை எனும் நிலையில் விரைவாக ரன் சேர்த்து நெட் ரன் ரேட்டை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தது பெங்களூரு அணி. அதன் பின் விரைவாக விக்கெட்களை இழந்தது. அந்த அணி 117 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. அப்போது தினேஷ் கார்த்திக் அபாரமாக அடி 21 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய தினேஷ் கார்த்திக் தான் முதலில் பேட்டிங் செய்ய தயாரான மனநிலையில் இல்லை எனவும், முதல் ஆறு ஓவர்களில் விரைவாக ரன் குவிக்கப்பட்டதால் தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்காது என நினைத்ததாகவும் கூறினார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசுகையில், "பெங்களூரு அணியின் பேட்டிங் துவங்கிய போது நான் டீ குடித்தேன். அதன் பின் நான்கு ஓவர்கள் முடிந்தவுடன் முதல் காபியை அருந்த துவங்கினேன். நான் பேட்டிங் செய்ய மாட்டேன் என்று அப்போது நினைத்தேன். நான் காலில் பேடுகளை கட்டிக் கொண்டு தயாராக இருக்கவில்லை. மனதளவிலும் பேட்டிங் செய்ய நான் தயாராக இல்லை. ஜாலியாக அமர்ந்திருந்தேன். ஆனால், அதன்பின் வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்தன. அதன் பின்னரே நான் பேடுகளை அணிந்து பேட்டிங் செய்ய தயாரானேன்." என்றார்.
மேலும், "முதலில் பேட்டிங் செய்த போது என்னால் சரியாக பந்தை அடிக்க முடியவில்லை. அதை சரி செய்து கொண்டேன். இந்த போட்டியில் வேறு விதமான அழுத்தத்துடன் நான் பேட்டிங் செய்தேன். இந்த சிறிய இலக்கை நான்கு விக்கெட்கள் கையில் இருக்கும் போது சேஸிங் செய்ய வேண்டும் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். மேலும் நெட் ரேட்டையும் கணக்கில் கொண்டு ஆடியதால் எப்படி பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே சிந்தித்தேன். அதிக பந்துகள் மீதம் இருந்ததால் சரியாக ஆட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. எப்படி அவுட் ஆகாமல் பவுண்டரி அடிப்பது என யோசித்தேன். அதுதான் எனது பலம் என்பதால் என்னை நானே நம்பினேன்" என்று கூறினார் தினேஷ் கார்த்திக்.