RCB vs GT: வாஷிங்டன் சுந்தர் அவுட் இல்லையா? விராட் கோலி ஆவேசம்.. நடுவரின் முடிவால் சர்ச்சை
அகமதாபாத்: 2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 10-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் விக்கெட் தொடர்பாக நடுவர் வழங்கிய 'நாட்-அவுட்' தீர்ப்பு மைதானத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியது. பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் மற்றும் விராட் கோலி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு எழுந்தது.
குஜராத் அணி பேட்டிங் செய்தபோது 10-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் அடித்த பந்து டீப் பைன்-லெக் திசையில் காற்றில் பறந்தது. அங்கு எல்லையில் நின்றிருந்த பெங்களூரு அணியின் மாற்று வீரர் ஜோர்டான் காக்ஸ் தரையோடு தரையாகப் பாய்ந்து பந்தைப் பிடித்தார். முதல் பார்வையில் இது ஒரு சுத்தமான கேட்ச் போலத் தெரிந்ததால், பெங்களூரு வீரர்கள் விக்கெட்டைக் கொண்டாடத் தொடங்கினர். ஆனால், கள நடுவர்கள் இந்த முடிவை மூன்றாவது நடுவரின் ஆய்வுக்கு அனுப்பினர்.

நடுவர் நாட்-அவுட் கொடுத்தது ஏன்?
பல்வேறு கோணங்களில் வீடியோவை ஆராய்ந்த மூன்றாவது நடுவர், வாஷிங்டன் சுந்தருக்கு 'நாட்-அவுட்' எனத் தீர்ப்பளித்தார். கிரிக்கெட் விதிமுறைப்படி, கேட்ச் பிடிக்கும்போது பந்து தரையில் படக்கூடாது. ஜோர்டான் காக்ஸின் விரல்கள் பந்தின் அடியில் இருந்தபோதிலும், பந்தைப் பிடிக்கும்போது அது புல் தரையில் லேசாக உரசியது வீடியோவில் தெரியவந்தது.
அவரது விரல்கள் பந்தை முழுமையாக மூடாமல் அடியில் மட்டுமே இருந்ததால், பந்து தரையில் படுவதைத் தடுக்க முடியவில்லை. வீடியோவில் பந்து தரையில் பட்டதற்கான சான்றுகள் இருந்ததாலும், பந்து தரையில் படவில்லை என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லாததாலும், சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு வழங்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.
கொந்தளித்த கோலி
இந்தத் தீர்ப்பைக் கேட்டு பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஜோர்டான் காக்ஸ் பந்தைச் சரியாகத்தான் பிடித்தார் என்று வாதிட்ட ரஜத் படிதார், நடுவர்களிடம் சென்று இது குறித்து விளக்கம் கேட்டார். விராட் கோலியும் மைதானத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
குஜராத்துக்கு கைகொடுத்த சுந்தர்
நடுவர் கொடுத்த இந்த மாற்றுத் தீர்ப்பு குஜராத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்தது. அப்போது குறைந்த ரன்களில் இருந்த வாஷிங்டன் சுந்தர், அதன் பிறகு அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இந்த அரைசதம் தான் சரிவில் இருந்த குஜராத் அணியை மீட்டு 155 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது.


Click it and Unblock the Notifications
