பெங்களூர்: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது சிராஜை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது அணியில் இருந்து நீக்கி அதிர்ச்சி அளித்திருந்த நிலையில், அவர் தற்போது அந்த அணிக்கு எதிராக விளையாட உள்ளார். சமீபத்தில் முகமது சிராஜ் இந்திய அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களை ஈடு கட்டும் வகையில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்தார். அங்கு அவர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியிலும் முக்கிய வீரராக மாறி இருந்தார். இந்திய அணியிலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமிக்கு அடுத்து சிராஜ் தான் என சொல்லும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தார்.
ஆனால், திடீரென அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன் அவரை தங்கள் அணியில் இருந்து நீக்கியது. அதை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு இருந்தார்.
இந்த இரண்டு ஏமாற்றங்களையும் அவரால் தாங்க முடியவில்லை. இது குறித்து அவ்வப்போது அவர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் சில பேட்டிகளையும் அளித்திருந்தார். யாரைப் பற்றியும் தவறாக சொல்லவில்லை என்றாலும் தான் ஏமாற்றத்தில் இருப்பதை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதற்கிடையே 2025 ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிராஜை வாங்கி இருந்தது.
தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நிலையில் விராட் கோலியை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் முகமது சிராஜ். தனக்கு ஏற்பட்ட அனைத்து ஏமாற்றங்களையும் ஈடு கட்டும் வகையில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு தான் முகமது சிராஜ் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் பந்து வீசி இருந்தார். எனவே, அவருக்கு அந்த மைதானம் நன்கு அத்துப்படியாகும். அதை பயன்படுத்தி அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சிதறடிக்க வாய்ப்பு உள்ளது.