தவறான முடிவுகள்
பெங்களூர் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் சறுக்கியது அணித் தேர்வில் தான். அதற்கு ஒரு முக்கிய காரணம் கேப்டன் கோலி. இதில் மாற்றுக் கருத்தே இல்லை. கிறிஸ் கெயில் ஒரு சீசனில் மோசமாக ஆடினார். அடுத்த சீசனில் அவரை கழட்டி விட்டது பெங்களூர் அணி.
பஞ்சாப் அணியில் கெயில்
அவரை ஏலத்தில் எடுத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரால் பெரிய அளவில் பலன் பெற்றுள்ளது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதே போல சில முக்கிய வீரர்களை நம்பாமல் வெளியே அனுப்பியதில் கோலியின் பங்கு அதிகம்.
கோலியின் திறமை குறைவு
அதே போல, இளம் வீரர்களின் திறமையை கண்டறிந்து பயன்படுத்துவது என்பது தனிக்கலை. இந்த விஷயத்தில் கோலியின் திறமை குறைவுதான். அவர் ஏற்கனவே சாதித்த வீரர்களை தான் அணியில் வைத்துக் கொள்ள விரும்புகிறார். அதற்கும் ஒரு உதாரணம் உண்டு.
இடம் மாறிய சர்ப்ராஸ் கான்
சர்ப்ராஸ் கான் என்ற இளம் வீரர் பெங்களூர் அணியில் மூன்று ஆண்டு காலம் தன் திறமையை வெளிப்படுத்த முடியாமல் இருந்தார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு மாறி, அங்கே கிடைத்த வாய்ப்புகளில் ரன் குவித்து தன் திறனை வெளிக்காட்டி உள்ளார்.
அணித் தேர்வு சரியில்லை
பெங்களூர் அணியின் முக்கிய பிரச்சனை பந்துவீச்சாளர்கள் தான். ஒன்றிரண்டு பந்துவீச்சாளர்கள் தவிர மற்ற வீரர்கள் மிகவும் மோசமாக செயல்படுகிறார்கள். மேலும், அந்த அணியில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இல்லை. ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் ஒரு ஆல்-ரவுண்டரை மையமாக வைத்து தான் பந்துவீச்சு அல்லது பேட்டிங் திட்டங்கள் செயல்படும்.
மற்ற அணிகள்
சென்னை அணியில் பிராவோ, ஜடேஜா, கொல்கத்தா அணியில் ரஸ்ஸல், சுனில் நரைன், ஹைதராபாத் அணியில் விஜய் ஷங்கர், முஹம்மது நபி, ரஷித் கான், மும்பை அணியில் பண்டியா சகோதரர்கள் என வெற்றிகளை பெற்று வரும் அணிகள் ஆல்-ரவுண்டர்களை வைத்து திட்டம் போடுகின்றன.
வாய்ப்பு இல்லை
ஆனால், பெங்களூர் அணியில் ஸ்டாய்னிஸ், மொயீன் அலி, கோலின் டி கிராண்ட்ஹோம் என சில ஆல்-ரவுண்டர்கள் இருந்தும் அவர்களுக்கு அதிக ஓவர்கள் பந்துவீசும் வாய்ப்பு கிடைப்பதில்லை. சில ஓவர்கள் மட்டுமே வீசும் அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
வாஷிங்க்டன் சுந்தர் எங்கே?
வாஷிங்க்டன் சுந்தர் நல்ல ஆல்-ரவுண்டர் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், அவருக்கு ஐந்து போட்டிகளில், ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்காதது பெரிய தவறு என ரசிகர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது.
ஏன் வாய்ப்பு?
அதே போல, மோசமாக பந்து வீசி வரும் சிராஜ், உமேஷ் யாதவ்வுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைத்து வருவது ஏன் என்பதை யாராவது கூறினால் நன்றாக இருக்கும். இவர்கள் இந்திய அணிக்கு பந்து வீசும் போதும் மோசமாகவே வீசினார்கள். அவர்களுக்கு ஏன் பெங்களூர் அணியில் இத்தனை வாய்ப்பு?
முடிவுகள் எடுப்பது யார்?
மேற்கூறிய பல விஷயங்கள், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எடுக்கும் முடிவுகள் சார்ந்தது. பெங்களூர் அணி பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனை யாரும் குறை கூறி விட முடியாது. ஆனால், அவர் பெங்களூர் அணியில் கேப்டன் கோலியை தாண்டி சுதந்திரமாக முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. கடைசியில், சொதப்பல்களுக்கு காரணம் கோலி என்ற முடிவிற்குத்தான் நாம் வர வேண்டி உள்ளது.
தலை சுற்றுகிறது
பெங்களூர் அணி கேப்டன் பதவிக்கு கோலியை தாண்டி வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கும் நிலையில் பெங்களூர் அணி 2019 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் செல்வது மிக மிகக் கடினமே. மேலும், உலகக்கோப்பையில் இந்திய அணி கோலி - ரவி சாஸ்திரி தலைமையில் என்ன செய்யப் போகிறது என நினைத்தால், தலை சுற்றுகிறது.