பெங்களூர்: சில தினங்களுக்கு முன்பு விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், நேற்று நடக்கவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவருக்கு ரசிகர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் சில முயற்சிகளை எடுத்திருந்தனர்.
அனைத்து ரசிகர்களும் விராட் கோலியின் டெஸ்ட் ஜெர்சியை (வெள்ளை நிற உடை) அணிந்து வந்து அவருக்கு மரியாதை செலுத்த முடிவு செய்திருந்தனர். அதற்கேற்ப நேற்று மழைக்கு நடுவே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெள்ளை நிற உடையுடன் ஒன்று திரண்டனர்.

மழையின் காரணமாக போட்டி நடைபெறாத போதும் அவர்கள் ஒன்று திரண்டு விராட் கோலிக்கு அர்ப்பணிக்கும் வகையில் வெள்ளை நிற உடையை அணிந்து இருந்தனர். எனினும், போட்டி நடைபெறாததால் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துக்கொண்டிருந்தது.
அப்போது வானத்தில் மழை நின்ற இடைவேளையின் போது வெள்ளை நிறப் புறாக்கள் கூட்டமாகப் பறந்து சென்றன. அதை பலரும் வீடியோ எடுத்து, 'பறவைகளும் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதற்கு மரியாதை செலுத்தி இருக்கிறது' எனக் கூறி வருகின்றனர். அதாவது டெஸ்ட் போட்டிகளின் வெள்ளை நிற உடையை குறிக்கும் வகையில் வெள்ளை நிற புறாக்கள் பறந்ததாக குறிப்பிட்டனர். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விராட் கோலி ரசிகர்கள் இதைப் பார்த்து மெய்சிலிர்த்து வருகின்றனர்.
பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையின் காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2025 ஐபிஎல் தொடரிலிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருக்கின்றன. தற்போது நான்காவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸும் பிளே ஆஃப் முன்னேறும் வாய்ப்பை இழந்து இருக்கிறது.