பெங்களூர்: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து விலகி வருவது அந்த அணி ரசிகர்கள் மத்தியில் பீதியை கொடுத்துள்ளது. ஏற்கனவே பில் சால்ட் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், விரைவில் ரொமாரியோ ஷெப்பர்ட் தேசிய பணிக்காக பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தேவ்தத் படிக்கல் காயம் அடைந்து விலகி இருப்பது கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி என்றாலும், இன்னும் ஒரு போட்டியில் வென்றால் டாப் 2 இடங்களில் நிறைவு செய்ய முடியும். இல்லையென்ரால் எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டிய நிலை வரலாம்.

எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்தால், உடனடியாக வெளியேற வேண்டிய நிலையும் வரும். ஆனால் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி, அந்த போட்டியில் தோல்வியடைந்தால் கூட இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஆர்சிபி அணி டாப் 2ல் நிறைவு செய்ய வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. ஆனால் பிளே ஆஃப் சுற்று நெருங்கும் போது, அந்த அணிக்கு பல்வேறு சிக்கல் உருவாகி வருகிறது.
ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹேசல்வுட் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அதேபோல் தொடக்க வீரர் பில் சால்ட் காய்ச்சல் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கிறார். தற்போது அதிரடி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் தேசியப் பணி காரணமாக சொந்த ஊர் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய பிரச்சனையாக தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகி இருக்கிறார். இந்த சீசனில் தேவ்தத் படிக்கல் 10 இன்னிங்ஸில் விளையாடி 247 ரன்களை விளாசி இருக்கிறார். முதல் சில போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருந்தாலும், கடந்த சில போட்டிகளாக ஆர்சிபி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தால், பவர் பிளேவில் ரன்களை சேர்ப்பதில் படிக்கல் முக்கிய வீரராக இருந்து வந்தார். தற்போது படிக்கல் காயமடைந்து வெளியேறி இருப்பதால், அவரது இடத்திற்கு மயங்க் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் ஃபார்மின்றி தவித்து வருவதால், படிக்கல் செய்த பணியை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிளே ஆஃப் சுற்று நெருங்கியிருக்கும் நிலையில், ஆர்சிபி அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கேப்டன் ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்கள் கொஞ்சம் கூட ஃபார்மில் இல்லாமல் இருப்பது கூடுதல் சிக்கலை உருவாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.