Virat Kohli: "உடல்நிலை சரியில்லை.. ஆட்டத்தை முடிக்க நினைத்தேன் ஆனால்".. விராட் கோலி உருக்கமான பேச்சு
பெங்களூர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்ற பிறகு, தனது உடல்நிலை பாதிப்பு மற்றும் காயம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வெளிப்படையாகப் பேசியுள்ளார். லக்னோ அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு, விராட் கோலி 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
இவரது இந்த அதிரடி ஆட்டம் பெங்களூரு அணி 15.1 ஓவர்களிலேயே இலக்கை எட்ட உதவியது. அத்துடன் 2026 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடம் பிடித்து 'ஆரஞ்சு தொப்பியை' மீண்டும் தன்வசமாக்கினார்.

காயத்துடன் போராட்டம்
வெற்றிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, "கடந்த போட்டியை விட இன்று நன்றாக உணர்கிறேன். ஆனால் நான் இன்னும் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை. கடந்த போட்டியில் எனது முழங்காலில் லேசான வலி இருந்தது. அதோடு கடந்த 4 அல்லது 5 நாட்களாகவே எனது உடல்நிலை சரியாக இல்லை. ஒருவிதமான காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தேன். அதிலிருந்து இப்போதுதான் மெதுவாக மீண்டு வருகிறேன். இன்று ஆட்டத்தை நானே முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்று விரும்பினேன், அது நடக்கவில்லை" என்றார்.
ஆடுகளம் மற்றும் திட்டம்
சின்னசாமி மைதானத்தின் தன்மை குறித்துப் பேசிய விராட் கோலி, "இன்று ஆடுகளம் வழக்கத்தை விட மெதுவாக இருந்தது. கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்ததால் மைதானம் வறண்டு காணப்பட்டது. புற்களும் பெரிய அளவில் இல்லை. எனவே, பவர்பிளே ஓவர்களிலேயே அதிரடி காட்டி எதிரணியை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்தத் திட்டத்தை நான் சரியாகச் செயல்படுத்தியதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.
அதிரடி பேட்டிங் வரிசை
அணியின் பலம் குறித்துப் பேசிய கோலி, "எங்கள் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. பில் சால்ட், ரஜத் படிதார், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் என அதிரடி வீரர்கள் வரிசையாக உள்ளனர். க்ருணால் பாண்டியாவுக்கு இன்னும் பேட்டிங் செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு நாங்கள் பேட்டிங்கில் ஆழமாக இருக்கிறோம். 5 விக்கெட்டுகள் விழுந்தாலும், 4 ஓவர்களில் 50 ரன்கள் எடுக்கும் திறன் கொண்ட வீரர்கள் பின்னால் இருக்கிறார்கள் என்ற தைரியம் எங்களுக்குப் பெரிய சுதந்திரத்தைத் தருகிறது" என்றார்.
எதிர்கால சவால்
நவீன அதிரடி கிரிக்கெட் குறித்துப் பேசிய விராட் கோலி, "எல்லா போட்டிகளும் 230 அல்லது 240 ரன்களாக இருக்காது. தொடரின் இரண்டாம் பாதியில் போட்டிகள் இன்னும் கடுமையாகும். அப்போது நெருக்கடி அதிகமாக இருக்கும். அந்தச் சூழலைச் சரியாகக் கையாளும் அணிகளே நீண்ட தூரம் செல்லும். மாறிவரும் கிரிக்கெட் முறைக்கு ஏற்ப என்னைத் தகவமைத்துக் கொள்ள நான் கடுமையாக உழைத்து வருகிறேன்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications