பெங்களூர் : 17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் இதுவரை முடிவடைந்த 5 போட்டிகளிலும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றிபெற்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த 5 போட்டிகளிலும் சொந்த மண்ணில் விளையாடிய சிஎஸ்கே, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் கொல்கத்தா ஆகிய 5 அணிகளும் வென்றுள்ளன. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் வெற்றிபெறக் கூடிய அணிகளை ஒவ்வொரு நிர்வாகமும் கட்டமைத்துள்ளது புரிய வருகிறது.

இந்த நிலையில் ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் களமிறங்கவுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி களமிறங்க உள்ளதால், இந்த சீசனில் ஆர்சிபி அணி முதல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆர்சிபி அணி இதுவரை சின்னசாமி மைதானத்தில் விளையாடியுள்ள 84 போட்டிகளில் 39 போட்டிகளில் மட்டுமே ஆர்சிபி அணி வென்றுள்ளது.
சின்னசாமி மைதானத்தில் ரன்களை கட்டுப்படுத்த கூடிய பவுலர்கள் இருந்தால் மட்டுமே வெற்றியை பற்றி சிந்திக்க முடியும். அந்த வகையில் ஆர்சிபி அணியில் சிராஜ், மயங்க் டாகர் மற்றும் வைஷாக் விஜய்குமார் ஆகிய 3 பேர் மட்டுமே ரன்களை கட்டுப்படுத்த கூடிய பவுலர்களாக உள்ளனர். ஆனால் பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஹர்ப்ரீத் பரார், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங் ஆகிய 3 தரமான பவுலர்கள் உள்ளனர்.
இதனால் ஆர்சிபி அணி வெற்றிபெற வேண்டுமென்றால் பேட்டிங்கை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. முதல் பேட்டிங் விளையாடி மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே ஆர்சிபி அணியால் வெற்றிபெற முடியும். அது மட்டுமல்லாமல் பஞ்சாப் அணி இந்த சீசனை அற்புதமாக தொடங்கியுள்ளது.
சாம் கரனை நம்பர் 4ல் களமிறக்கியதன் மூலம் பஞ்சாப் அணியின் பேட்டிங் பலமிக்கதாக மாறியுள்ளது. அதேபோல் ஒரு வீரர் 20 ஓவர்கள் விளையாட வேண்டும் என்பதும், யார் அட்டாக் செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெறுவது சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.