சண்டிகர்: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.
இதன் மூலமாக இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 5வது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் பஞ்சாப் அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆர்சிபி அணி பதிலடி கொடுத்துள்ளது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விராட் கோலி பேசுகையில், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. 2 புள்ளிகள் என்பது பிளே ஆஃப் தகுதி பெறுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
அந்நிய மண்ணில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருகிறோம். அதேபோல் புள்ளிப் பட்டியலில் 8ல் இருந்து 10ஆக புள்ளிகள் உயரும் போது மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும். ஒவ்வொரு போட்டியிலும் 2 புள்ளிகளை பெறுவது மட்டுமே எங்கள் மனநிலையாக உள்ளது. இந்த போட்டியில் கூடுதலாக அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தேவ்தத் படிக்கலின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது.
ஆட்டநாயகன் விருது தேவ்தத் படிக்கலுக்கு தான் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக எனக்கு விருது அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை. கடைசி வரை களத்தில் இருப்பதும், தேவைக்கேற்ப அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடுவதும் திட்டமாக இருந்தது. இந்த இன்னிங்ஸில் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
மழைக் காரணமாக கடந்த போட்டி 14 ஓவர்களாக நடத்தப்பட்டது. அதில் தோல்வியடைந்ததால், பஞ்சாப் அணிக்கு எதிராக தீவிரமாக விளையாட வேண்டும் என்று விரும்பினோம். டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கில் ஒரேயொரு பார்ட்னர்ஷிப் மொத்தமாக ஆட்டத்தை மாற்றிவிடும். தற்போதைய சூழலில், நான் ஒரு முனையில் நின்று விக்கெட்டை காப்பது ஆர்சிபி அணிக்கு சரியாக இருக்கிறது.
இந்த மெகா ஏலம் எங்களுக்கு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, பட்டிதார் ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இன்று கூட ரொமாரியோ சிறப்பாக பங்களித்தார். இதுதான் கடந்த சில சீசன்களாக எங்களுக்கு சிக்கலாக இருந்தது. எங்கள் வீரர்களால் கவுன்டர்அட்டாக் செய்ய முடிகிறது. அதேபோல் வெற்றிக்கான பசியுடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.