பெங்களூர்: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வந்ததால், ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்பின் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது. 2 அணிகளுமே இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் இருக்கின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் ஆர்சிபி அணி இதுவரை சொந்த மண்ணில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் 3வது போட்டியில் வென்று பெங்களூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் முனைப்பில் ஆர்சிபி அணி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆர்சிபி அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரில் பெய்து வரும் மழையால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால், ரசிகர்கள் சோகமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் 8.30 மணிக்கு மேல் மழை தொடர்ந்த போது, ஓவர்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் 9 மணியளவில் பெங்களூரில் மழை நின்றது. இதன்பின் தார்பாய்கள் நீக்கப்பட்டு, நடுவர்கள் சோதனை செய்தனர்.
இதன்பின் ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பேட்டிங் பவர் பிளே 4 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு அணியில் 4 பவுலர்கள் அதிகபட்சமாக 3 ஓவர்கள் வீசலாம் என்றும், மீதமுள்ள 2 ஓவர்களை ஒரு பவுலர் வீச வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்கிறோம். இந்த மைதானத்தில் நன்றாக சேஸிங் செய்ய முடியும். ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், பிட்ச் எப்படி செயல்படும் என்பதை அறிவோம். மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஹர்ப்ரீத் பரார் வந்துள்ளார். சரியான போட்டிகளில் சரியான வீரர்கள் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில், சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொள்வோம். முதல் பேட்டிங் செய்து சிறந்த இலக்கை நிர்ணயிப்போம். கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.