அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு 191 ரன்களை ஆர்சிபி அணி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இந்த சீசனில் அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய 8 போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். குறைந்தபட்ச ஸ்கோராக 196 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், ஆர்சிபி அணி 190 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறது.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை சேர்த்துள்ளது. கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை இழந்து குறைந்த அளவிலான ரன்களை மட்டுமே சேர்த்திருப்பது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

அதேபோல் இந்த போட்டியில் ஆர்சிபி அணி மொத்தமாக 28 டாட் பால்களை ஆடி இருக்கிறது. பஞ்சாப் அணி தரப்பில் இளம் வீரர் வைஷாக் விஜய்குமார் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். அதேபோல் கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் ஆர்சிபி அணி 15 முதல் 20 ரன்களை குறைவாக சேர்த்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் மொத்தமாக 8 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது. அந்த 8 இன்னிங்ஸ்களில் 7 முறை முதல் பேட்டிங் ஆடிய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இந்த சீசனில் அகமதாபாத் மண்ணில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 196 ரன்களாகும்.
ஆனால் இந்த சீசனில் அகமதாபாத் மைதானத்தில் முதல் பேட்டிங் ஆடிய அணிகளில் ஆர்சிபி அணி மிகக்றைந்த ஸ்கோரை பதிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஜேமிசன் வீசிய ஓவரில் 3 சிக்சர் அடித்த போது ஆர்சிபி அணி பக்கம் ஆட்டம் திரும்பியது. ஆனால் அதே ஓவரில் லிவிங்ஸ்டன் விக்கெட்டை பறிகொடுத்து பஞ்சாப் அணி உள்ளே வருவதற்கு களம் அமைத்து கொடுத்துவிட்டார்.
10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 87 ரன்களை அடித்து சிறந்த அடித்தளம் அமைத்திருந்தது. ஆனால் அடுத்தடுத்து ரஜத் பட்டிதர், விராட் கோலி உள்ளிட்டோர் விக்கெட்டை பறிகொடுத்தனர். இன்னும் சொல்லப் போனால் சரியான பவுலிங் மாற்றங்களை செய்து, பஞ்சாப் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளார் என்றே பார்க்கப்படுகிறது.