அகமதாபாத்: யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங், 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும், எந்த வீரர் சிறப்பாக விளையாடுவார் என்பது பற்றி தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் விராட் கோலி 250 அல்லது 300 ரன்கள் கூட சேசிங் செய்வார் எனக் குறிப்பிட்டு பஞ்சாப் கிங்ஸ் அணியை எச்சரித்து இருக்கிறார்.
அதேசமயம், விராட் கோலியை 10 ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும் எனவும் கூறியிருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி வருவதாகவும், இந்த இறுதிப் போட்டி ஸ்ரேயாஸ் ஐயருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான இறுதிப் போட்டி எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

2025 ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து யோக்ராஜ் சிங் பேசுகையில், "பஞ்சாப் அணி விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். விராட் கோலியை அவர்கள் அவுட் ஆக்காவிட்டால், அவர் 250 அல்லது 300 ரன்கள் கூட சேசிங் செய்வார். ஆனால், நான் பஞ்சாப் அணிதான் வெற்றி பெறும் என நினைக்கிறேன்."
"விராட் கோலி முதல் 10 ஓவர்களில் ஆட்டமிழந்துவிட்டால், இந்தப் போட்டி முடிந்துவிடும். எனது உள்ளுணர்வு பஞ்சாப் அணியே வெற்றி பெறும் என சொல்கிறது. பஞ்சாப் அணி அற்புதமான கேப்டனை வைத்துள்ளது. அவர் அருமையான வீரர். இந்தப் போட்டி பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் விராட் கோலிக்கும் இடையிலானது."
"ஆர்சிபி அணிக்கு விராட் கோலி இருந்தால், பஞ்சாபிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். பஞ்சாப் நிச்சயம் வெல்ல வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விராட் கோலி போட்டியை வென்று கொடுக்க முடியும் என்றால், ஸ்ரேயாஸ் ஐயராலும் அதை செய்ய முடியும்," என நம்பிக்கையுடன் பேசினார் யோக்ராஜ் சிங்.
2025 ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது. எனவே, அந்த அணிக்கு சாதகமான நிலை இருப்பதாகவே முன்னாள் வீரர்களும் தெரிவிக்கின்றனர். எனினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அனைத்து வீரர்களும் இதுவரை சிறப்பாக விளையாடி உள்ளதால், அந்த அணி மீதும் நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.