பெங்களூர்: பஞ்சாப் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் தூக்கத்தில் இருந்து முழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புஜாரா அறிவுறுத்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடும் போது தங்களின் அணிகளின் தோல்வியை நினைத்து சில நேரங்களில் வீரர்கள் கவலை கொள்வதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 34வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. சின்னச்சாமி மைதானத்தில் ஆடியுள்ள 2 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் பஞ்சாப் அணியில் உள்ள வீரர்களுக்கு சின்னச்சாமி மைதானத்தில் விளையாடுவது இன்னும் உதவியாக இருக்கும். இதனால் சின்னச்சாமி மைதானத்தில் பஞ்சாப் அணியின் கைகள் ஓங்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் பஞ்சாப் அணியில் உள்ள முக்கிய சிக்கலாக மேக்ஸ்வெல் இருந்து வருகிறார். ஏனென்றால் இந்த ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள கிளென் மேக்ஸ்வெல், இதுவரை 41 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஆனால் பவுலிங்கில் 6 இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உதவி செய்திருக்கிறார். பேட்டிங்கிலும் அவரின் பங்களிப்பு இருந்தால், பஞ்சாப் அணியின் வெற்றி உறுதி என்று சொல்ல முடியும்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக சின்னச்சாமி மைதானத்தில் தான் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்காக ஆடி இருக்கிறார். இதனால் மைதானத்தின் அத்தனை விஷயங்கள் தொடர்பாகவும் மேக்ஸ்வெல் நன்றாக அறிந்து வைத்திருப்பார். இதனால் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு பஞ்சாப் அணியின் வெற்றிக்கு மிக முக்கியம் என்று பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக புஜாரா பேசுகையில், ஐபிஎல் தொடரை அணுகும் முறையை மேக்ஸ்வெல் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் மிகவும் சாதாரணமாக எடுத்து கொள்கிறார். இதேபோன்று தான் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பும் காணப்பட்டார். நான் அவரை விமர்சிக்கிறேன் என்றும் கூட வைத்து கொள்ளலாம்.
ஆனால் சில நேரங்களில் ஒரு வீரராக முன் நிற்க வேண்டிய அவசியம் வரும். நமக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது என்பதை அந்தந்த வீரர்கள் உணர வேண்டும். அதேபோல் ஐபிஎல் தொடரில் அணிகள் தோல்வி அடையும் போது கூட வீரர்கள் கவலைப்படுவதில்லை. அப்போதும் சாதாரணமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.