பெங்களூர்: ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்ற விவாதம் நடந்து வரும் நிலையில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாட உள்ளது. இந்த இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி உட்பட 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4 மற்றும் 5 ஆகிய இடங்களில் இருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு நெருக்கமாக செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் ஆடிய இரு போட்டிகளிலும் மோசமான தோல்விகளை பெற்றிருக்கிறது. இதனால் சின்னச்சாமி மைதானத்தில் ஆர்சிபி அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பெறுமா என்ற சந்தேகம் அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி 111 ரன்களை டிஃபெண்ட் செய்து நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.
இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், பஞ்சாப் அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அந்த அணியின் ஸ்பின்னர்கள் மற்றும் மிடில் ஆர்டர் வலிமை காரணமாக பஞ்சாப் அணி பந்தயம் அடிக்கும் என்று விவாதங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே பெங்களூர் வானிலை நிலவரம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் கர்நாடகா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பெங்களூர் நகரில் லேசான முதல் மிதமான மழை இருக்கும் என்றும், வடக்கு மற்றும் தெற்கு கர்நாடகாவில் உள் பகுதிகளில் வலிமையான காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இதனால் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு, சின்னசாமிக்கு மைதானத்தில் ராசி இல்லாததால், மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் கூட 1 புள்ளி கிடைக்கும் என்று கூறி வருகின்றனர்.