சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சண்டிகர் மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், பஞ்சாப் அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆர்சிபி அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சண்டிகர் மைதானத்தில் இன்று மீண்டும் இரு அணிகளும் விளையாடுகின்றன.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றால், அந்த அணியால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஒருவேளை ஆர்சிபி அணி தோல்வியடைந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கடினமாகிவிடும்.
இந்த நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ரஜத் பட்டிதார் பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங்கை தேர்வு செய்கிறோம். இந்த பிட்ச் பெரியளவில் மாற்றம் அடையாது என்று கருதுகிறேன். 2வது பேட்டிங்கின் போது எங்களுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும். லிவிங்ஸ்டனுக்கு பதிலாக ரொமாரியோ ஷெப்பர்ட்ட் சேர்க்கப்பட்டுள்ளர் என்று தெரிவித்தார்.
இதன்பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், நாங்களும் பவுலிங்கை தேர்வு செய்யவே விரும்பினோம். எங்கு விளையாடினாலும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொள்ள வேண்டும். இந்த சீசனில் முதல்முறையாக மதிய நேரத்தில் விளையாடுகிறோம். அதனால் பிட்சில் பந்து எப்படி செயல்படும் என்று பார்க்க வேண்டும். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.