சண்டிகர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். இந்த சீசனில் முல்லன்பூர் மைதானத்தில் இதுவரை ஆடிய 4 இன்னிங்ஸ்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 25 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பதால், அவரின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ரன்களை விளாசினர்.

4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 41 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், உடனடியாக க்ருனால் பாண்டியா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இதன்பின் க்ருனால் பாண்டியா பவுலிங்கில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். அதன்பின் பிரப்சிம்ரன் சிங் அட்டாக்கை தொடங்கினார்.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அடக்கி வாசிக்க, பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 62 ரன்களை எட்டியது. இதன்பின் பிரப்சிம்ரன் சிங் 33 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் அட்டாக்கை முன்னெடுக்கும் பொறுப்பு வந்தது. அதற்கேற்ப ரொமாரியோ ஷெப்பர்ட் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். புதிய பவுலரை அட்டாக் செய்ய வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டை ஓங்கினார்.
ஆனால் அவர் அடித்த பந்து நேராக க்ருனால் பாண்டியா கைகளில் சென்று விழுந்தது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சொந்த மண்ணில் ஆடும் போட்டிகளில் மட்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை முல்லன்பூரில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடியுள்ள 4 போட்டிகளிலும் சேர்த்து 25 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறர். ஆனால் அந்நிய மைதானங்களில் ஆடியுள்ள 4 போட்டிகளில் 3 அரைசதங்களை ஸ்ரேயாஸ் ஐயர் அடித்திருக்கிறார். இதனால் முல்லன்பூரில் ஆடும் போது ஸ்ரேயாஸ் ஐயர் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.