பெங்களூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். விராட் கோலி அடித்த பந்தை 20 மீட்டர் தூரம் ஓடி சென்று மார்கோ யான்சன் அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனால் சின்னச்சாமி மைதானமே மயான அமைதியானது.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. பெங்களூரில் கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஆட்டம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

14 ஓவர்களில் 4 பவுலர்கள் அதிகபட்சமாக 3 ஓவர்கள் வரை வீசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பஞ்சாப் அணிக்காக முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார்.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே ஆர்சிபி அணியின் அதிரடி தொடக்க வீரரான பில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பில் சால்ட் கொடுத்த கேட்சை 27 மீட்டர் தூரம் ஓடி வந்து விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அபாரமாக பிடித்து அசத்தினார். தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் - விராட் கோலி கூட்டணி இணைந்தது.
2வது ஓவரை வீசுவதற்காக பார்ட்லெட் வந்தார். அந்த ஓவரில் ரஜத் பட்டிதார் 10 ரன்கள் சேர்த்த நிலையில், 3வது ஓவரை வீச விராட் கோலி வந்தார். அந்த ஓவரில் விராட் கோலி கொஞ்சம் அவசரம் காட்டிய நிலையில், எதிர்பாராத நேரத்தில் அர்ஷ்தீப் சிங் பவுன்சர் பந்தை வீசினார். அது விராட் கோலியின் பேட்டில் அடித்து டாப் எட்ஜாகியது. அது மிட் ஆன் திசையை கடந்து சென்றது.
ஆனாலும் மிட் ஆனில் இருந்த மார்கோ யான்சன் 20 மீட்டர் தூரம் ஓடி சென்று அபாரமாக கேட்ச் பிடித்து மிரள வைத்தார். இதனால் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் சின்னச்சாமி மைதானமே சில நிமிடங்கள் மயான அமைதியுடன் காணப்பட்டது.