பெங்களூர்: இந்திய கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஸ்டார் யாரென்றால் சுனில் கவாஸ்கர் தான். 1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரிலேயே 771 ரன்களை விளாசி உலகையே திரும்ப பார்க்க வைத்தவர். 1987ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி வந்த சுனில் கவாஸ்கர், அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இந்திய கிரிக்கெட்டை தீவிரமாக கண்காணித்து வரும் சுனில் கவாஸ்கர், இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருபவர். அதேபோல் இந்திய அணி வென்றால், ஒவ்வொரு வீரரையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் முதல் மனிதரும் சுனில் கவாஸ்கர் தான்.

அண்மையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போது கூட வர்ணனையாளராக இருந்தாலும், மைதானத்தில் இந்திய அணி கோப்பையை வென்ற போது மகிழ்ச்சியில் நடனமாடி கொண்டாடினார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சுனில் கவாஸ்கர் வர்ணனையாளராக பணியை மேற்கொண்டு வருகிறார். இளம் வீரர்கள் பலரையும் சுனில் கவாஸ்கர் தட்டி கொடுத்து வருகிறார்.
அவரின் வர்ணனையிலேயே இளம் வீரர்களுக்கான அட்வைஸ்-களும் அமைந்துள்ளது. இந்த நிலையில் 75 வயதாகும் சுனில் கவாஸ்கர் ஐபிஎல் தொடரில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள டாக் கேமராவுடன் ( Dog Cam ) விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சீசனில் டாக் கேம் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் நடவடிக்கைகள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
சுனில் கவாஸ்கர் டாக் கேமராவுடன் இணைந்து டான்ஸ் ஆடி விளையாடி மகிழ்ந்துள்ளார். 75 வயதிலும் சுனில் கவாஸ்கரின் ஃபிட்னஸ் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. கொஞ்சம் கூட தளர்ச்சியடையாமல் சுனில் கவாஸ்கர் ஒவ்வொரு தொடரிலும் வர்ணனை செய்வதோடு, ரசிகர்களையும் இப்படியான நடவடிக்கை மூலம் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் 70 வயதிற்கு மேல் தாங்களும் இப்படியொரு ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால் விராட் கோலியை விடவும் சுனில் கவாஸ்கர் தனது காலத்தில் சிறந்த ஃபிட்னஸை கொண்டிருந்திருப்பார் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.