பெங்களூர்: ராஜஸ்தான் அணியின் சிறுவனான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை முன்னாள் வீரர் முரளி விஜய் பாராட்டி உள்ளார். ஆர்சிபி அணியின் புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் 2 சிக்சர்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்த்த முரளி விஜய், இந்த தலைமுறை வீரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்றும் மிரண்டு போயுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 42வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும் விளாசி அசத்தினர்.

இதன்பின் 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் அபாரமாக ஒரு சிக்சரை விளாச, சின்னச்சாமி மைதானமே சைலண்ட் ஆனது. தொடர்ந்து யாஷ் தயாள் வீசிய 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார்.
தொடர்ந்து 3வது ஓவரை வீச புவனேஷ்வர் குமார் வந்தார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஒரு சிக்சரை விளாச, பின்னர் 5வது ஓவரின் முதல் பந்திலும் இன்னொரு சிக்சரை விளாசினார். இதனால் சின்னச்சாமி மைதானத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் ரசிகர்கள் அமைதியாகினர். தில்லுக்கு துட்டாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்தை வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர் முரளி விஜய் பாராட்டி தள்ளியுள்ளார். முரளி விஜய் பேசுகையில், எனது பையனுக்கு 12 வயதாகிறது. இந்த பையன் 14 வயதில் ஐபிஎல் தொடரில் ஆடிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 14 வயதில் புவனேஷ்வர் குமாரின் பந்தில் சிக்ஸ் அடிக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷி அனைத்து பந்துகளிலும் சிக்ஸ் அடிக்க முயற்சிப்பதுதான் கூடுதல் ஆச்சரியம். வீட்டில் அவரது தந்தை பயிற்சி அளிக்கும் போது, மைதானத்தில் இறங்கி சிக்ஸ் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே சொல்லி கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். புவனேஷ்வர் குமாரின் கைகளில் இருந்து பந்தை கவனித்து சிக்ஸ் அடிக்கிறார் அந்த சிறுவன்.
அசால்ட்டாக சிக்ஸ் அடிக்கும் இந்த தலைமுறை வீரர்கள் என்னதான் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இவரின் வளர்ச்சியை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று பாராட்டியுள்ளார். முரளி விஜய் போல் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.