பெங்களூர்: ஆர்சிபி அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்து அடைந்து வரும் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பேசி இருக்கிறார். பவர் பிளேவில் கூடுதல் அதிரடியாக விளையாட முயற்சித்து விக்கெட்டை பறி கொடுப்பதாக கூறிய அவர், ஷாட் தேர்வில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டி இருக்கிறது. மும்பை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வென்று, திடீரென புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் ஆர்சிபி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் புள்ளிப் பட்டியலில் பின் தங்கி இருக்கிறது. இந்த சூழலில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாட இருக்கிறது.

சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த சீசனில் சின்னச்சாமி மைதானத்தில் ஆடிய 3 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் இதுவரை வெல்லாத ஒரே அணியும் ஆர்சிபி தான். இதனால் ஆர்சிபி அணி கம்பேக் கொடுக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் அடைந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பேசி இருக்கிறார். அதில் ரஜத் பட்டிதார் பேசுகையில், சொந்த மண்ணில் விளையாடும் போது பவர் பிளேவில் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூடுதலாக அட்டாக் செய்கின்றனர். ஆனால் சின்னச்சாமி மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு அவ்வளவு எளிதாக இல்லை.
பவர் பிளேவில் ஒவ்வொரு 12 பந்துகளுக்கும் ஒரு விக்கெட்டை நாங்கள் இழந்திருக்கிறோம். இதுவரை சொந்த மண்ணில் நாங்கள் அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. அதேபோல் நாங்கள் தோல்வியடைந்த 3 போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளோம். முதல் இன்னிங்ஸில் பவுலிங் செய்பவர்களுக்கு பிட்சில் சிறந்த உதவி கிடைக்கிறது. அதேபோல் ஆர்சிபி பேட்ஸ்மேன்களின் ஷாட் தேர்வு தவறாக இருக்கிறது.
அதனால் ஷாட் தேர்வில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. சின்னச்சாமி மைதானத்தின் பிட்சில் கொஞ்சம் பவுன்ஸ் வித்தியாசமாக இருக்கிறது. எங்களின் பேட்ஸ்மேன்கள் ஸ்கொயர் திசையில் அதிக ஷாட்களை விளையாட வேண்டும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.